மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் விஜய் வசம் ஒரு ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெகவுக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதால், பிரச்சாரத்தின் வியூகத்தை மொத்தமாக மாற்ற விஜய் முடிவு செய்திருக்கிறார்.
அதற்கான பணிகளை ஜான் ஆரோக்கியசாமி வசம் ஒப்படைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருக்கும் தவெக சார்பாக சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே தவெகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தொகுதியிலும் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வந்த விஜய் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசித்திருக்கிறார். அப்போது உளவுத்துறை தரப்பில் ஒரு ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட்டில் இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களுக்கு இருக்கும் எதிர்ப்பு தொடர்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்திருப்பதால், விஜய் அதற்கேற்ப பிரச்சார வியூகத்தை அமைக்குமாறு வியூக வகுப்பு குழுவிடம் அறிவுறுத்தி இருக்கிறார். இதன் காரணமாகவே விஜய்யின் பிரச்சாரம் 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் மதுராந்தகம் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இந்த பிரச்சாரத்தின் போது அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ஏன் தவெகவில் சீட் கொடுக்கப்பட்டது என்று விஜய் விரிவாக பேச இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திமுக – அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததை அதிகமாக தனது பிரச்சாரத்தில் பேச இருக்கிறார். விஜய்யின் முதற்கட்ட பிரச்சாரத்தில் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, எதிர்க்கட்சிகள் எனன் பதில் அளிக்கும் என்பதை கவனிக்க உள்ளார்.
இதற்கு 2ஆம் கட்ட பிரச்சாரத்தில் மேடையில் பதில் அளிக்க விஜய்யின் வியூக வகுப்பு குழு திட்டமிட்டிருக்கிறது. ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி 2 தொகுதிகளையும் கைப்பற்ற விஜய் திட்டமிட்டிருக்கிறார். இரு தொகுதிகளுக்கும் விஜய் வந்தாலே, நிச்சயமாக வென்றுவிடுவோம் என்று தவெக வேட்பாளர்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.





