அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே, அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர் இவர்.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது.இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அன்வர் ராஜா தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து” என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததில், அன்வர் ராஜாவிற்கு விருப்பம் இல்லை. இன்று (ஜுலை-21) அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து, அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்குவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்து பேசினார்.இதனால், அப்போது சி.வி.சண்முகத்துக்கும் அன்வர் ராஜாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, கூட்டத்திலிருந்து வெளியேறினார் அன்வர் ராஜா. பின்னர், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்தது.இந்தச் சம்பவம் நடைபெற்று ஒன்றரை ஆண்டு கடந்து அதிமுக-பாஜக கூட்டணி முறிவு என்ற நிலையில் 2023-ம் ஆண்டு, மீண்டும் அன்வர் ராஜா கட்சியில் இணைந்தார்.ஆக, அன்வர் ராஜா முன்பு இருந்தே அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை.
யார் இந்த அன்வர் ராஜா?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர். அவருக்கு, 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான் முதன்முறையாக வாய்ப்பளித்தார் எம்ஜிஆர். அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த தேர்தல் அதுதான். திமுக ஆதரவு அலை வீசிய அந்த உள்ளாட்சித் தேர்தலில், மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் அன்வர் ராஜா.

பின்னர், மதுரையில் நடந்த எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அன்வர் ராஜாவை அழைத்துப் பேசவைத்த எம்ஜிஆர், அதிமுகவின் அதிகாரம் வாய்ந்த குழுக்களுள் ஒன்றான 15 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில் அன்வர் ராஜாவையும் சேர்த்துக்கொண்டார். அவர்களில் 13 பேர் அமைச்சர்கள். அமைச்சர்கள் அல்லாத இருவர், அன்வர் ராஜாவும் ஜெயலலிதாவும் மட்டுமே.
எம்ஜிஆரின் மறைவுப் பிறகு அதிமுக உடைந்தபோது ஜானகி எம்ஜிஆரின் பக்கம் நின்ற அன்வர் ராஜா, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் சேர்ந்துகொண்டார். அந்த நாள் தொடங்கி, வென்றாலும் தோற்றாலும் அதிமுகவே என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் அன்வர் ராஜா.
அதிமுகவில் இருக்கும் சிறுபான்மைச் சமூகத்து மக்களின் பிரதிநிதியாக இருந்த அன்வர் ராஜாவுக்கு, 2001 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாநில அமைச்சர் பதவி கிடைத்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சராகச் செயல்பட்டார். திடீரென அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, பிறகு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எனும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனாலும் அதிமுகவிலேயே தொடர்ச்சியாக நீடித்துவந்த அன்வர் ராஜா, திடீரென அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என்றார். சசிகலாவுக்கு ஆதரவான வார்த்தைகளையும் வெளிப்படுத்தினார்.
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்த 2021-ல் அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 2023 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அன்வர் ராஜா அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
மூத்த உறுப்பினரான அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.