பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது.பெங்களூரு விதான்செளதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதானசெளதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காமாட்சி தேவி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா தனியார் பள்ளியின் தாளாளரும், சமூக ஆர்வலருமான மூர்த்தியின் மகள் காமாட்சி தேவி (வயது 27) என்பவரும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளார். காமாட்சிக்கு இன்னும் திருமனமாகவில்லை. இவர் பெங்களூரு அமேசான் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

தனது மகள் காமாட்சியின் மரணம் குறித்து பேசிய மூர்த்தி, ”எனது மகள் பெரிதாக எதற்கும் ஆசைப்பட மாட்டாள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக, ஒரு கிரிக்கெட் மேட்ச்சையாவது நேரடியாகப் பார்க்க வேண்டுமென்று ரொம்பவும் ஆசைப்பட்டாள். பலமுறை முயற்சி செய்தும் அவளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் நேற்று தனது தோழிகளுடன் அங்கு சென்றிருக்கிறாள். எப்போது எங்கு சென்றாலும் எங்களிடம் சொல்லாமல் அவள் போகவே மாட்டாள். நேற்று எங்களிடம் எதுவும் சொல்லவில்லை.” என்றார்.

”அதன்பின் நடந்ததை அவள் நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது. நாங்கள் சென்றடைய இன்று அதிகாலை 3:00 மணியாகிவிட்டது. காலை 5 மணிக்கெல்லாம் பிரேத பரிசோதனை முடித்துக் கொடுத்து விட்டார்கள். பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்போதுதான் (காலை 10:00 மணி) உடலை எடுத்துக் கொண்டு சேலம் வந்து கொண்டு இருக்கிறோம். ஸ்டேடியத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில்தான் எனது மகள் இறந்ததாக உடனிருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எங்களால் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.” என்றார்

இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், இன்று காலை சுமார் 10.00 மணி அளவில்  உடுமலை ஏரிப்பாளையம் VG ராவ் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு (EB ஆபீஸ் எதிரில் ) எடுத்து வரப்படுகிறது.

காமாட்சி தேவியின் மரணம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.