ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை அழைத்து வரும் வழியில் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும், பிரபல ரௌடிகள் பலரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரௌடிகளையும் போலீசார் தேடி வந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து, சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது, நீலாங்கரை அக்கரை பகுதியில் வைத்து விசாரணை நடத்திய போது, சீசிங் ராஜா போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் சீசிங் ராஜா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 32க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், 2-வது நபராக சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
previous article
ஐடி துறையில் அசுர வளர்ச்சி பெறப்போகும் கோவை..
you might also like
இரானை தாக்கிய இஸ்ரேல் – என்ன நடக்கிறது?
February 28, 2026
உலக சாதனை படைத்த உடுமலை சிறுவன் சேன் ஜெரோம்.. மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
February 20, 2026




