விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வழுதரெட்டி காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து முன்பிருந்தே முறைகேடாக 2 வீடுகள், 6 கூரை வீடுகள், ஒரு அங்காளம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு இடங்களில் தொடர்ச்சியாக இவர்கள் வசித்து வருகின்றனர். அரசியல் தலையீடுகளால் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், நகராட்சிக்கு சொந்தமான இந்த சுடுகாடு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள அங்காளம்மன் கோவிலை அகற்ற வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த நபர் பொதுநல வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்பு அகற்றாததால் இன்று காலை (மே-01) நகராட்சி மற்றும் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள பொதுமக்கள் திரண்டு, இந்த கோவிலில் நாங்கள் அனைவரும் வழிபட்டு வருகின்றோம். நாங்கள் யாருமே இந்த கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில் யாரோ ஒருவர் வழக்கு தொடுத்தார் என்பதற்காக கோவிலை இடிப்பது நியாயமா? இங்கு இன்னும் எவ்வளவோ ஆக்கிரமிப்புகள் உள்ளது. அவற்றை எல்லாம் எடுத்துவிட்டு அதன் பின்னர் கோவிலை இடியுங்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.

அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது; உயர்நீதி மன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே இது தொடர்பாக அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் சார்பில் கேட்டுக்கொண்டபடி ஒரு மாதம் காலம் காலக்கெடுவும் கொடுக்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பு அகற்றாததால்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் உள்ளது என்றனர்.
இதன்பின்னர், ஜேசிபி வாகனத்தை கொண்டு கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர். கோவிலில் இருந்த சிலைகளை துணியால் சுற்றி பத்திரமாக அகற்றினர். டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இதேபோல, இன்றுவரை சில தனி நபர்கள் சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மேற்படி ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பழனி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை வைக்கின்றனர்.