திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் கணியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதியிலிருந்து வரும் ஏழை, எளிய நோயாளிகளும், கர்ப்பிணிகளும், தாய்மார்களும், முதியோர்களும் கணியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகளவில் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக மருத்துவர் அம்பிகை என்பவர் பணியாற்றி வருகின்றார். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ சேவைகளும், 24 மணி நேரம் பிரசவத்திற்கான மருத்துவ சேவைகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை என்கிறார்கள்?
புறநோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை, பிரசவம், கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, இரத்த பரிசோதனை, காயங்களுக்கு கட்டு கட்டுதல், வெட்டுக்காயங்களுக்கு தையல் போடுதல், ஊசிபோடுதல், தொற்று நோய் சிகிச்சை, தடுப்பூசி போடுதல் போன்ற மருத்துவ சேவைகளையும் வழங்க வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலும் நோயாளிகளுக்கு ஊசி போடுவதில்லை என்கிறார்கள். அதோடு, புறநோயாளிகளை தொட்டுப்பார்த்து மருத்துவ பரிசோதனை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கு சிகிச்சை பெற வந்த வயதான நோயாளி ஒருவர் கூறும்போது, உடல் உபாதை தொடர்பாக குறிப்பிட்ட ஒரு செவிலியரிடம் கூறியதற்கு “வயசான அப்படித்தான் இருக்கும் இன்னும் நீ நூறு வருசம் உயிரோடு இருப்பியா” என ஒருமையில் சகட்டுமேனிக்கு திட்டுகிறார் என கண்கலங்கினார். தட்டிக்கேட்டால் எங்கு நமக்கு மருத்துவம் பார்க்கமாட்டார்களோ என்ற அச்சத்தில் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது என்றார்.
இதுபோன்ற ஒருசில செவிலியர்களின் மோசமான நடவடிக்கைகளால் தான் ஒட்டுமொத்த செவிலியர்களுக்கும் தலைகுனிவு ஏற்படுகின்றது.
சிறு, சிறு பிரச்னைகளுடன் வரும் பெரும்பாலான புறநோயாளிகளை முறையாக பரிசோதிக்காமல், மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு போ, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போ என பஸ் ஏற்றி துரத்தி விடுவதிலேயே குறியாக இருக்கின்றனர் என புலம்புகின்றனர் நோயாளிகள். இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதை காரணம் காட்டி நடக்கும் இதுபோன்ற அட்டூழியங்களெல்லாம் திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை துணை இயக்குனருக்கு தெரியுமா? இல்லை தெரிந்தும் மௌனமாக இருக்கிறாரா?
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்ச்சியாக சர்ப்ரைஸ் இன்ஸ்பெக்ஷன் செய்து வருகிறார். அதேபோல ஒரேஒரு முறை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து அங்குள்ள நோயாளிகளிடம் விசாரணை நடத்தினால் போதும் பல குட்டுக்கள் வெளிச்சத்திற்கு வரும்.
பணமின்றி பிணியுடன் வருவோர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறம் கூட செவிலியர்களிடம் இல்லாமல் போய்விட்டது தான் காலக்கொடுமை..