அதிமுகவில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது உட்கட்சி விவகாரம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சீனியர்கள் கொந்தளிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற நபராக இருக்கும் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் இரு முக்கிய நிர்வாகிகளுக்கு அமைப்பு செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கொங்கு மண்டலத்தில் வேலுமணியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த ஏற்பாடு என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்..

கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் புயல் வீச தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட விழாவில் ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் இடம் பெறவில்லை என அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார் முன்னாள் அமைச்சரும் கட்சியின் மிக மூத்த சீனியருமான செங்கோட்டையன்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தும் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் விழா குழுவினரிடம் மேடையில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும் என கூறியும் அவர்கள் படங்கள் இல்லை எனவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு,அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை என விளக்கமும் அளித்திருந்தார்.

செங்கோட்டையனின் பேச்சு புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என்பதற்கான அல்ல, எடப்பாடி பழனிச்சாமி மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் அது என்கின்றனர் அதிமுகவினர். மேலும், மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

செ.ம.வேலுச்சாமி

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை பல தேர்தல்களை அதிமுக படுதோல்வியை அதிமுக சந்தித்திருக்கிறது. கட்சியிலிருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டதால் அதிமுக பலவீனமாக காட்சியளிக்கிறது. இதை வைத்து எதிர்க்கட்சியினரும் அதிமுகவை பலவீனமாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. மேலும் சசிகலா, ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் வந்தால் தொண்டர்கள் பலமும் நிர்வாகிகள் பலமும் மேலும் அதிகரிக்கும். எனவே அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் எஸ்பி வேலுமணி வலியுறுத்தினார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ அதற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போதும் அதற்கு பிறகும் டெல்லியில் தனது நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்ட எஸ்பி வேலுமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கூறி வருகிறார். மேலும் பிரிந்து போனவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தனது வீட்டிற்கே முன்னாள் அமைச்சர்களை அழைத்து வந்து எஸ்பி வேலுமணி பேசியதை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை.

சின்னச்சாமி

இதனையடுத்து சாமிகளை வைத்து மணிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே எஸ்பி வேலுமணி கட்சியின் பல பொறுப்புகளில் இருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரான வேலுசாமி, முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி ஆகியோர் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரே மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இருவருக்கு அமைப்பு செயலாளர்கள் பதவி கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமியால் வேலுமணியை தவிர்க்கவும் முடியாது, அதே நேரத்தில் அவரது செயல்பாடுகளையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது ஆதரவாளர்களை பெருக்கிக் கொள்ளும் வகையிலேயே இரு சாமிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி பதவி கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் பாஜகவுடன் கூட்டு, கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என எஸ்பி வேலுமணி மறைமுக நெருக்கடி கொடுத்த வரும், நிலையில் அவரை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு என்கின்றனர் அதிமுகவினர்.