திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று (மே-20) உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் புகார் மனு அளித்தனர். விவசாயியாகிய பா.யோகேஷ்வரன் கூறியதாவது.. கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் புல எண் 1042/14 மற்றும் 5க்கு இடையில் உள்ள தார்ச்சாலையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இந்த வழித்தடத்தை சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு, தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களை கனரக வாகனங்களில் கொண்டு செல்லவும், விவசாயப் பயன்பாட்டிற்காக  கனரக வாகனங்கள் விவசாய நிலங்களுக்கு வந்து பணிகள் செய்திடவும், இங்குள்ள கோழிப்பண்ணைக்கு தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்த சாலையே பிரதான சாலையாக உள்ளது. அதோடு, நியாய விலைக்கடையும் உள்ளதால் அதற்கான வாகன போக்குவரத்தும் தடைபடுகிறது.

இந்நிலையில், மேற்படி சாலையை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுகின்றது. அவர்களிடம் பலமுறை எடுத்துக்கூறியும் கேட்கவில்லை என்பதால் தற்போது புகார் அளித்துள்ளோம். எங்களது மனுவினைப் பெற்றுக்கொண்ட ஜமாபந்தி சிறப்பு அலுவலர் நாளை தினமே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.