தென்னை விவசாயம் செழித்த வளமான பகுதியாக விளங்குகின்றது பொள்ளாச்சி மக்களவை தொகுதி. சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி தேங்காய் மற்றும் இளநீர் இந்திய அளவில் பிரபலமானது. அதோடு, தேங்காய் நார் தொழிற்சாலைகள், அதனைச்சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் கோவைக்கு அடுத்தவாறு வளமான பகுதியாக பொள்ளாச்சி விளங்குகின்றது.
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் உள்ளது. மேற்படி ஆறு சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக வசமே உள்ளது. அதிமுக அதிகப்படியாக 7 முறையும், 5 முறை திமுகவும் இந்த பாராளுமன்ற தொகுதியை நேரடியாக கைப்பற்றியுள்ளது.
சிட்டிங் எம்பி கு.சண்முகசுந்தரத்திற்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவரும், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளருமான கே.ஈஸ்வரசாமியும், அதிமுக சார்பில் ஆனைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரான கார்த்திக் அப்புசாமி (எ) கார்த்திகேயனும், பாஜக சார்பில் கே.வசந்தராஜன், நாதக சார்பில் மருத்துவர் சுரேஷ்குமார் மற்றும் சில சுயேட்சை வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
குறைவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பாஜக கூட்டணி, நாதக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இங்கு தேர்தல் யுத்தம் என்பது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான். பாஜக தன் வாக்குவங்கியை சற்று அதிகப்படுத்தியுள்ளது. இருப்பினும், அது அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்காது. அதேபோல வெற்றி பெறுபவர்களுக்கும் பாதிப்பு இருக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கே.ஈஸ்வரசாமி-திமுக வேட்பாளர் –
திமுக வேட்பாளர் குறித்து நாம் அப்பகுதி மக்களிடம் கேட்டோம்.. மடத்துக்குளம் வட்டம், மைவாடி ஊராட்சி கருப்புச்சாமிபுதூர் எனும் குக் கிராமத்தை சேர்ந்த மடத்துக்குளம் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயம், இருசக்கர வாகன விற்பனை, ஜல்லி கிரஷர், கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட், நூற்பாலை உள்ளிட்ட இன்னும் சில தொழில்களை செய்து தனது கடின உழைப்பால் தொழிலிலும், அரசியலிலும் அசுர வளர்ச்சியடைந்தவர்.
கிளைக்கழக ஒன்றியப் பிரதிநிதி பொறுப்பில் தொடங்கி, தற்போது மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். அதோடு மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவராகவும் இருந்து வருகிறார். (இவரின் மனைவி லதா பிரியா தற்போது மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார்)
கட்சியினரை அரவணைத்து செல்வார். கழக முன்னோடிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார். தொண்டர்களின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றுவதால் இவருக்கு திமுகவினரின் ஆதரவு அமோகமாக உள்ளது. கட்சியினர் யாராவது வருத்தத்தில் இருந்தால் கூட உடனடியாக பேசி சரிசெய்து விடுவார். குறிப்பாக எதிரிகளை வளர்த்துக் கொள்ள மாட்டார். விளையாட்டுப் போட்டி, கோவில் விழா, சுக, துக்க நிகழ்வுகளில் தன்னால் முடிந்தளவு உதவுவதாலும், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாலும் இப்பகுதி மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமும், நல்ல பெயரும் உள்ளது.
தனது ஒன்றியத்திற்குட்பட்ட சதீஷ்குமார் சேலம் திமுக இளைஞரணி மாநாடுக்கு சென்று திரும்பி வரும் வழியில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். தகவலறிந்த கே.ஈஸ்வரசாமி அங்கு சென்று வேண்டிய உதவிகளை செய்து, உடற்கூராய்வு முடிந்து உடலை கொண்டு வரும் வரையில் கூடவே இருந்தார். இவரின் தீவிர முயற்சியால் தான் சதீஷ்குமார் குடும்பத்தினருக்கு திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பாக 7 லட்சம் உதவித்தொகை கிடைத்தது. இதுவரை இவ்வளவு பெரிய தொகை எங்கள் பகுதியில் திமுக சார்பில் யாருக்கும் கிடைத்தது இல்லை என்றார்.
மடத்துக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளிலும், சுமார் 15 கோடியளவில் திட்டங்களை பெற்றுத்தந்துள்ளார். எளிதில் அணுகக்கூடியவர் இதுவரை தன்மீது கறைபடியாமல் பார்த்துக்கொண்டவர் என்கின்றனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளிலுள்ள கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சி ரீதியாகவும் தொழில் நிமித்தமாகவும் நன்கு அறிமுகம் என்பதால் “ஈஸ்வரனுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப்போறோம்” என தேர்தல் வேலைகளில் சக்கைபோடு போட்டு வருகின்றனர்.
எம்.கார்த்திக் அப்புச்சாமி (எ) கார்த்திகேயன் –-அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர் குறித்து நாம் அப்பகுதி மக்களிடம் கேட்டோம்.. பொள்ளாச்சி வட்டம் திவான்சாபுதூரை பூர்வீகமாக கொண்டவர் எம்.கார்த்திகேயன் வெளிநாட்டில் பெரிய நிறுவனத்தில் எட்டு வருடங்களுக்கு முன் வேலை பார்த்தவர். விவசாயம், பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். தற்போது இவர் ஆனைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார். இவரின் மனைவியான சாந்தி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருந்து வருகிறார். இவரது தந்தை எம்.அப்புச்சாமி முந்தைய ஆனைமலை ஒன்றிய செயலாளராகவும், மாசாணி அம்மன் திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்தவர். ஆனைமலை பகுதியில் இவர்களின் குடும்பம் நல்ல அறிமுகம் என்கிறார்கள்.
தனித் தொகுதியான வால்பாறை தொகுதியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள முதல் எம்பி வேட்பாளர், பொள்ளாச்சி மக்களவை தொகுதியின் மையத்தில் இருந்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இவரை தேர்வு செய்துள்ளனர். மக்களவை தொகுதி முழுக்க உள்ள முன்னாள் அமைச்சர்கள் இன்னாள் எம்எல்ஏக்கள் படை பலமும், தொகுதி முழுக்க பல இடங்களில் இவரின் சொந்த பந்தங்கள் பரவி இருப்பதும் தான் வேட்பாளரின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இரு வேட்பாளர்களுமே ஒன்றிய செயலாளர்கள், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள், ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள் என்பதும் இருவருக்குமான ஒற்றுமை. கடந்த 2019 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து நின்று 59 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது மநீம திமுக கூட்டணியில் உள்ளதால் பலம் கூடியுள்ளது. திமுகவிற்கு ஆளுங்கட்சி என்ற இமேஜ், வலுவான கூட்டணி, மகளிருக்கான உரிமை திட்டம், இலவச பேருந்து பயணம், காலை உணவுத்திட்டம் பாஜக எதிர்ப்பு கவர்ச்சி அரசியல், எப்படியும் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்ற உணவுத்துறையாரின் சபதம், மாவட்ட அமைச்சர்களான சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் பத்பநாபன், அரசியல் வழிகாட்டியான முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர்களும் ஈஸ்வரசாமியின் வெற்றிக்கு கங்கணம் கட்டிக்கொண்டு களப்பணியாற்றி வருவதாலும், தொகுதிக்குள் வைட்டமின் “ப” சத்து அதிகமுள்ளதாலும் கட்சியினர் குதூகலத்தோடு பணியாற்றி வருகின்றனர்.
அதிமுக கடந்த முறை பறிகொடுத்த பொள்ளாச்சி மக்களவை தொகுதியை கைப்பற்ற நினைக்கிறது. திமுகவோ தொகுதியை தக்கவைத்துக்கொள்ள முஷ்டியை முறுக்குகிறது. ஆளுங்கட்சிக்கே வாக்களிக்கலாம் என்ற பொதுவான எண்ணம், சட்டசபையில் அதிமுகவுக்கும், மக்களவையில் திமுகவுக்கும் வாக்களிக்கும் வாக்காளர்களின் குணம் போன்ற காரணங்களால் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி வெற்றி பெற்று மக்களவைக்கு செல்வார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.