டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட! காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்!: காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்பகை காரணமாக டிஎஸ்பியை கைது செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதாக குற்றச்சாட்டின் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

டிஎஸ்பி சங்கர் கணேஷ்

காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பியாக இருப்பவர் சங்கர் கணேஷ். இவர் வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சரியாக விசாரிக்க தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல், சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மலின் உத்தரவை எதிர்த்து சென்னை நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட நீதிபதிக்கும், டிஎஸ்பிக்கும் இடையே ஏற்கெனவே முன் பகை உள்ளது. அதனால்தான் நீதிபதி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார் என வாதிட்டார். இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மலை, அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை வணிக நீதிமன்ற முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த தீப்தி அறிவுநிதி, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சங்கர் கணேஷ்-செம்மல் இடையே உள்ள முன்பகை குறித்து ஹைகோர்ட் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இதையடுத்து நீதிபதி செம்மலை சஸ்பெண்ட் செய்ய சென்னை ஹைகோர்ட் பதிவாளர் ஆணை பிறப்பித்துள்ளார்.