தமிழக கேரள எல்லையில் லாட்டரி சீட்டை வைத்து ஹைடெக் மோசடி நடக்கிறது. டிக்கெட்டில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் கூட அசல் டிக்கெட் போலவே, கேரள லாட்டரி இணையதளத்திற்கு செல்வது போல இந்த போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தகைய ஹெடெக் மோசடி கேரளாவில் லாட்டரி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. புதன்கிழமை மட்டும் ரூ.1 கோடி பரிசுத்தொகையும் இதர நாட்களில் முதல் பரிசாக ரூ.75 லட்சம் கொண்ட லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.40 ஆகும். இது தவிர ஓணம் பம்பர், மான்சூன் பம்பர், பூஜா பம்பர், கிறிஸ்துமஸ், நியூ இயர் பம்பர், விஷு பம்பர், சம்மர் பம்பர் என 6 பம்பர் பரிசு கொண்ட டிக்கெட்டுகளும் விற்பனையாகின்றன.இதில், ஓணம் பம்பர் டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைக்கும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரள லாட்டரிகளை பொறுத்தவரை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விற்பனை செய்வது சட்ட விரோதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இப்படி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசு விழுந்தால் கூட அதை பெற முடியாது. கேரள அரசு விதிகளின் படி, லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிய வெளி மாநிலத்தவர்கள் கேரளாவில் வந்து வாங்கியதை உறுதி செய்தால் மட்டுமே பரிசு அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஓணம் பம்பரில் முதல் பரிசாக திருப்பூரை சேர்ந்த 5 பேருக்கு கிடைத்தது. கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கியதாக முதலில் புகார் எழுந்ததால் பரிசுத்தொகையை நிறுத்திவைத்து, விசாரணைக்கு பிறகே பரிசுத்தொகை ஒப்படைக்கப்பட்டது.

இது ஒருபக்கம் இருக்க கேரளாவில் இந்த ஆண்டு மான்சூன் பம்பரில் முதல் பரிசாக அடித்த ரூ.10 கோடிக்கான லாட்டரி டிக்கெட் தமிழகத்தை சேர்ந்தவருக்கு அடித்ததாகவும், கள்ளச்சந்தையில் வாங்கியதால் இந்த டிக்கெட்டிற்கு பரிசுத்தொகை பெற முடியாத சூழல் இருப்பதாகவும், இதனால், டிஸ்கவுண்ட் விலையில் முதல் பரிசுத்தொகையை தருவதாக கூறி கேரள – தமிழக எல்லை பகுதிகளில் நூதன மோசடி நடைபெறுகிறது. டிக்கெட்டில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் கூட அசல் டிக்கெட் போலவே, கேரள லாட்டரி இணையதளத்திற்கு செல்வது போல இந்த போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் பாக்யா கேரளா செயலிக்கு செல்கிறது. இந்த செயலி கேரள அரசின் செயலியாகும். இத்தகைய ஹெடெக் மோசடி நடப்பது கேரளாவில் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.