தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் 5 ஆம் தேதி வரை வெப்பநிலை 2 – 4 டிகிரி வரை குறையக்கூடும் என்றும், சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அனலை கக்கும் வெயிலால் மக்கள் வெளியில் செல்வதற்கே தயங்குகிறார்கள். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெயில் பல்வேறு இடங்களிலும் சதமடித்து வருகிறது. இந்த நிலையில் நாளையில் இருந்து வெயில் படிப்படியாக குறையும் என்றும், குறிப்பாக நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் நாளை முதல் 5 ஆம் தேதி வரை வெப்பநிலை 2 – 4 டிகிரி வரை குறையக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  நாளை மறுநாள் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று வரும் 4, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இன்று முதல் தமிழகத்தில் மழை ஆரம்பிக்கும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.