திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயதான தம்பதிகளை நகைக்காக குறிவைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொங்கு மண்டலத்தை மட்டுமல்ல தமிழகத்தையே கதிகலங்க வைத்தது. தோட்டத்து வீடுகளில் குடியிருக்கும் வயதானவர்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த கொலை வழக்கு குற்றவாளிகளைக் கைது செய்ய, மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் உத்தரவின்படி, டி.ஐ.ஜி சசிமோகன் மேற்பார்வையில், ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஈரோடு மாவட்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

சம்பவம்-1,திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி வீட்டில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் நகைகள் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கில் மாதங்கள் பல கடந்தும் கொலையாளிகள் பிடிபடவில்லை. இந்நிலையில் பல்வேறு அரசியல் அழுத்தங்களால் வேறுவழியின்றி தனிப்படையிடமிருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம்-2, ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி என்ற கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி – பாக்கியம்மாள் கடந்த மே மாதம் 1-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதில், பாக்கியம்மாள் அணிந்திருந்த தாலி கொடி, வளையல் என 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த இரு கொலை சம்பவங்களும் மேற்கு மண்டலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 60 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் நீலகிரி, சேலம், நாமக்கல், பெருந்துறை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் குறிப்பாக வயதானவர்களை கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடைபெற்றது.

மேலும், இரவு நேரங்களில் துப்பாக்கியுடன் வாய்க்கால் கரையோரம் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். புதிதாக சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களையும் சந்தேக நபர்களையும் விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைக் கைது செய்யாததைக் கண்டித்து மே 20-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் மக்களை திரட்டி நடத்தப்படும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடல் கண்டெடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 50 மணிநேரங்களுங்கு முன்பு இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இருவரின் தலையில் மட்டும் இரும்பு அல்லது கட்டை போன்ற ஆயுதத்தால் அடித்துள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், சிவகிரி சுற்றுவட்டார பகுதியில் ஈரோடு போலீஸார் நடத்திய விசாரணையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் கொலை நடைபெற்ற நாளில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரச்சலூரைச் சேர்ந்த மாதேஷ்வரன், ரமேஷ் மற்றும் அச்சியப்பன் ஆகிய மூவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், பல்லடம் மற்றும் சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயதான தம்பதியினரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீட்டில் வசித்த முதியவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தது ஒரே மாதிரியாக இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினோம். அதில், தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரச்சலூரைச் சேர்ந்த மாதேஸ்வரன், ரமேஷ் மற்றும் அச்சியப்பன் ஆகிய மூவர், சிவகிரியில் கொலை நடந்த தினத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது.

சிவகிரியில் நடந்த தம்பதிகள் கொலை வழக்கு சம்பவத்தில் தொர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை போக்கியதற்காக கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாரை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தார் ஈரோடு மக்களவை உறுப்பினர் கே.இ.பிரகாஷ்.

அதன் அடிப்படையில் அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மூவரும் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. 2015-இல் திருட்டு வழக்கில் கைதாகி 9 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ளனர். சிறையில் தொடங்கிய பழக்கம், சிறையைவிட்டு வெளியே வந்த பின்பும் தொடர்ந்துள்ளது.
ராமசாமி தோட்டத்துக்கு தேங்காய் பறிக்கச் சென்றபோது, அவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டுள்ளனர். ஏப்ரல் 28-ஆம் தேதி இரவு 10 மணிக்கு ராமசாமியின் வீட்டருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்று வெளியே இருந்த கழிவறைக்குள் மூவரும் ஒளிந்து கொண்டுள்ளனர். இரவு 12 மணி அளவில் கழிவறைக்கு வந்த பாக்கியம்மாளை கட்டையை வைத்து அடித்துக் கொலை செய்துள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த ராமசாமியையும் அதே கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், பாக்கியம்மாள் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர். அந்த நகைகளை சென்னிமலைபாளையத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனிடம் கொடுத்து உருக்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் நகைக்காக இதேபோல் அடித்துக் கொலை செய்தததையும் மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன் 10-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்களையும் செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதுதொடர்பாக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கவுள்ளோம்.
அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கொலைக்குப் பயன்படுத்திய கையுறை, ராமசாமியின் செல்போன், உருக்கப்பட்ட பாக்கியம்மாளின் நகைகள் 82 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனால் அடையாளம் சொல்ல முடியாது என்பதால் அடித்துக் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை உருக்கிக் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார் ஐஜி.செந்தில்குமார்.
இதுபோன்ற குற்றச் சம்பவம் மேலும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தீவிர பகல் மற்றும் இரவு ரோந்துகள், 35 இருசக்கர வாகன ரோந்து, 3 நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கரையோர பகுதிகளில் ஆயுதம் தாங்கிய 21 ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டு சாட்டையை சுழற்றியுள்ளார் ஐஜி செந்தில்குமார்.
மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன், ஈரோடு எஸ்பி சுஜாதா மற்றும் தனிப்படையில் பணியாற்றிய காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அறம் காக்க அவசரமேனும் அஞ்சாதே,
காவல் உயிரே துணையாக நிற்கும் நிழலாக..
–அ.முக்தார்.