ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுவதா ? அல்லது திமுக போட்டியிடுவதா? என்ற முடிவெடுக்காமல் இருந்து வரும் நிலையில் திமுக வேறு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும்.

ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமி

காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. கடந்த முறை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டபோது, தேர்தல் பணி செய்ய எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்களோ அதே பகுதிகளுக்கு இந்த முறையும் அதே அமைச்சர்கள் அதே பகுதிகளுக்கு நியமிக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. இது குறித்த பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. பொங்கல் முடிந்ததும் 17-ந்தேதியிலிருந்து தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக பிளானிங்: அதனால், இந்த முறை திமுக போட்டியிடுகிறது என்று திமுக சீனியர்கள் தரப்பில் பேசப்படுகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தன்னை சந்திப்பவர்களிடம், “ஈரோடு கிழக்கில் போட்டியிட நமக்கான வாய்ப்பு குறைந்து வருகிறது . என்ன நடக்கிறது என பார்ப்போம்” என்று ஆதங்கத்துடன் சொல்லி வருகிறாராம்.

அதிமுக பின்வாங்கும்: ஏற்கனவே அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளதாம் 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.

அதோடு தற்போது இரட்டை இலை வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வருகின்றன.

தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பற்றி முடிவெடுக்கும் முன் ஓ பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி உள்ளது. எடப்பாடிக்கு இது கூடுதல் சிக்கல் ஆகி உள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நின்றால் சின்னம் முடங்கும்.. அதோடு தோல்வி அடைந்தால் தொடர் தோல்வியால் அழுத்தம் அதிகரிக்கும். இதை தவிர்க்கவே எடப்பாடி இந்த தேர்தலை புறக்கணிக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.