“ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹூதி போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பது ஏன்?” ஈரானிய பத்திரிகையாளர் ரெஸா தலேபி நேர்காணல்!

இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்தும், ஈரானில் இருக்கும் தற்போதைய நிலை குறித்தும், ஜெர்மனியில் வசித்து வரும் ஈரானிய பத்திரிகையாளரும், மத்திய கிழக்கு அரசியல் ஆய்வாளருமான ரெஸா தலேபியிடம் காணொளி வாயிலாக பேசினோம்…!

ஈரானில் உள்ள உங்கள் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடிந்ததா? ஈரானில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?”

“என் குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசினேன். நலமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படும் என்ற அச்சத்துடன்தான் மக்கள் தூங்கச் செல்கின்றனர். ஈரான் – ஈராக்கோடு நடந்த போர், அதன் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு அரசு ஒடுக்குமுறை அதைத் தொடர்ந்து இப்போது இஸ்ரேலின் தாக்குதல் என நிலைமை ஈரானில் கடுமையாகத்தான் இருக்கிறது.”

பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் கூறுவதுபோல் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறதா? இஸ்ரேலுக்கு ஈரான் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது உண்மையா?”

“ஈரான் பல ஆண்டுகளாக அணு சக்தி திட்டத்தில் கவனத்தை செலுத்தி வருகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான அந்த திறனை இன்னும் சில வாரங்களில் எட்டிவிடும் நிலையில்தான் இருக்கிறது. ஆனால், இப்போது இஸ்ரேல் ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால், அணு ஆயுதம் தொடர்பான ஈரானின் லட்சியம் இன்னும் வலுவடையலாம். ஆனால், இதைக் காரணம் காட்டி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது. குறிப்பாக இஸ்ரேலே அணு ஆயுதம் வைத்திருக்கும்போது, ஈரானை அச்சுறுத்தல் என்று இஸ்ரேல் எப்படி சொல்ல முடியும்? ஈரானில் உள்ள ஆட்சி மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுகிறது என்பது உண்மைதான், அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த காரணத்துக்காக, ஈரான் மீது அந்நிய சக்திகளின் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது.”

ஈரான்-இஸ்ரேல் போர்

அமெரிக்கா – ஈரான் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் பெஞ்சமின் நெதன்யாஹு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்று வாதம் குறித்து உங்கள் கருத்து என்ன?”

“ஆம் அது உண்மைதான். முந்தைய ட்ரம்ப் ஆட்சியில், ஈரான் உடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் தன்னிச்சையாக வெளியேறினார். இப்போது, மீண்டும் ஒரு அணு சக்தி ஒப்பந்தம் உருவாவதற்கான பேச்சுவார்த்தையை தடுத்து  நிறுத்தியிருக்கிறார் நெதன்யாஹு. ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும், ட்ரம்ப்பின் ஒப்புதலின்றி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது. இது மிகப் பெரிய திட்டம். சிரியா எப்படி போரில் சிக்கி 15 ஆண்டுகள் நாசமானதோ, அதேபோல் ஈரானை சிக்க வைக்க இஸ்ரேலும், அமெரிக்காவும் நினைக்கின்றன.”

ரெஸா தலேபி

ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹூதி போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பது ஏன்?”

“மத்திய கிழக்கில் ஒரு சமநிலையை உருவாக்கவே ஈரான் இதைச் செய்கிறது. பாலஸ்தீன விவகாரத்தில் உலகமே அமைதிகாத்தது. காரணம் இஸ்ரேலுக்கு மேற்குலக நாடுகளின் ஆதரவு இருந்தது. ஆனால், ஈரான்தான் முதலில் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இஸ்ரேலை ஒரு அச்சுறுத்தலாகத்தான் ஈரான் பார்க்கிறது. இப்போது ஹமாஸ், ஹெஸ்புல்லா குழுக்கள் வலுவிழந்துள்ளன.”

ஒருவேளை ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்துவிட்டால், அதை இந்த ஆயுதக் குழுக்களிடம் கொடுக்காது என்பது என்ன நிச்சயம்? அதைத் தானே அச்சுறுத்தலாக பார்க்கிறது இஸ்ரேல்?”

“இது வேடிக்கையாக இருக்கிறது. இஸ்ரேலே 400 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. ஆனால், எந்தவித சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்திலும் இஸ்ரேல் இல்லை. அண்டை நாடுகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இப்படிப்பட்ட இஸ்ரேல், ஈரானை அச்சுறுத்தல் என்கிறது. அணு ஆயுதம் என்ற ஒரே விஷயத்தை காரணம் காட்டி, ஈரானை எந்த சர்வதேச ஒப்பந்தத்துக்குள்ளும், வர்த்தக ஒப்பந்தங்களுக்குள்ளும்  போகவிடாமல் தடுத்து வருவதே இஸ்ரேல்தான்.”

கமேனி

ஈரானின் ஐஆர்ஜிசி (Islamic Revolutionary Guard Corps) படையின் தலைமைத் தளபதி, ஈரானின் உளவுத்துறை தலைவர் போன்ற ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள், இஸ்ரேலின் மொசாத் உளவுப் படையால் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஈரானின் பாதுகாப்பு வலுவிழந்துள்ளதை இது காட்டுகிறதா?”

“துரதிருஷ்டவசமாக இதுதான் ஈரானின் கள எதார்த்தம். ஈரான் அரசு மக்களை ஒடுக்கவதிலேயே குறிக்கோளாக இருக்கிறதே தவிர, வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. ஐஆர்ஜிசி படையில் மொசாத் ஊடுருவியிருக்கிறது. அந்த படையில் இன்பார்மர்களை மொசாத் வைத்திருக்கிறது. ஈரானுக்குள் இருந்து மொசாத்தால் இயங்க முடிகிறது. அதையெல்லாம் தடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஈரான் அரசு, சாலையில் ஒரு இளைஞன் தன் காதலிக்கு முத்தம் கொடுத்தால், கலாசார சீரழிவு என அங்கிருக்கும் கேமராக்கள் மூலம் அவனை கண்டுபிடித்து உடனே அபராதம் விதிக்கிறது. ஹெஸ்புல்லா, ஹமாஸ் மூலம் ஈரான் வெளியில் திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்க, இஸ்ரேலோ  ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது ஈரானின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.”

இஸ்ரேல் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தாக்குதல்களை நடத்தும் ஆயுத பலம் ஈரானுக்கு இருக்கிறதா?”

“மிகத் தொலைவு பறந்து தாக்கும் 1,100 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஈரானிடம் இருக்கின்றன. இது மிகப்பெரிய எண்ணிக்கை. 5,000 வான் பாதுகாப்பு தளங்கள் ஈரானில் இருக்கின்றன. அதுபோக, டிரோன் படைகளை வைத்திருக்கிறது ஈரான். ஆனால் இதுவரை ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை. அது குறித்து எந்த தகவலும் இல்லை.

இஸ்ரேல் போர் காட்சிகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, ஈரான் மக்களுக்கு, சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுப்பேன் என்று பேசுகிறாரே? அந்த பேச்சின் நோக்கம் என்ன? ஈரான் மக்கள் உண்மை அரசின் ஒடுக்குமுறையில்தான் இருக்கிறார்களா?”

“ஹ்ம்ம்ம்( சிரிக்கிறார்). காசாவில் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காத இஸ்ரேல் எப்படி ஈரான் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தர முடியும். இது வேடிக்கையான பேச்சு. இஸ்ரேலுக்குள் ஒடுக்குமுறை இருப்பது உண்மைதான். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொருளதாரத் தடைகளால், பொருளாதாரம் நலிவடைந்திருக்கிறது. ஆனால், அது ஈரானின் உள்நாட்டுப் பிரச்னை.ஈரான் மக்கள்தான் போராடி மாற்ற வேண்டும். ஈரானில் உள்ள பிரச்னைகளுக்கு எதிரி நாடு தீர்வு தர முடியாது. ஈரானுக்குள் இருக்கும் பிரச்னைகளை சாதகமாக பயன்படுத்தி, தன்னை ஹீரோவாக காட்ட நினைக்கிறார் பெஞ்சமின் நெதன்யாஹு. ஈரான் அரசாங்கம் சிறுபான்மையினர் மீது மட்டும்தான் ஒடுக்குமுறையை ஏவுகிறது. ஆனால், இஸ்ரேல் ஒட்டுமொத்த ஈரானிய மக்களையும் ஒரு எதிரியாகத்தான் ஈரான் மக்கள் பார்க்கின்றனர். அந்த அடிப்படையில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். ”

-நன்றி, ஜூனியர் விகடன்.