தமிழ்நாட்டிலேயே வேறு எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்குப் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும், உள்ளூர்த் தொழில் நிறுவனங்களும் நிரம்பியிருக்கும் தொகுதி ஸ்ரீபெரும்புதூர். புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தான் உள்ளது. பல்லாவரம் மலையை சுற்றி தொல்லியல் துறையினர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். இதனால் அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளது. இத்தொகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. சுமார் 23 லட்சம் வாக்காளர்களை உள்ளடக்கி, தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான வாக்காளர்களைக்கொண்ட தொகுதி எனப் பெயர் பெற்றுள்ளது.

தொகுதியின் பெரும் பகுதி நகர்ப்புறம் என்பதால், சமூகரீதியாகப் பலதரப்பட்ட மக்களும் கூடி வாழ்கிறார்கள். வன்னியர், பட்டியலினத்தவர், முதலியார் சமூக மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இந்தத் தொகுதியின் 2019 தேர்தலில் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் டி.ஆர்.பாலு.

திமுகவில் டி.ஆர்.பாலு, அதிமுகவில் பிரேம்குமார், பாஜக கூட்டணியான தாமாகவில் வேணுகோபால், நாம் தமிழர் கட்சியில் களஞ்சியம் சிவக்குமார், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் இம்முறையும் டி.ஆர்.பாலு களமிறங்குகிறார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் ஏற்பட்ட சிக்கல்கள், கடந்தாண்டு வெள்ள சேதம் போன்ற மக்கள் பிரச்னைகள் ஆளும் தரப்புக்கு சிறிய சேதாரத்தை ஏற்படுத்தலாம். ஆனால் வெற்றியை பாதிக்காது என்றே கருதப்படுகிறது.

அதிமுக சார்பாக பூந்தமல்லியை சேர்ந்த பூவை ஞானம் மகன் மருத்துவர் பிரேம்குமார் போட்டியிடுகிறார். அதிமுகவும் மூன்று முறை இங்கு வென்றுள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த பாமக, பாஜக, த.மா.கா போன்ற கட்சிகள் தற்போது எதிரணியில் உள்ளன. மேலும் இத்திகுதியில் ஓரளவு ஆதரவு கொண்ட புரட்சி பாரதம் கட்சிக்கு இம்முறை அதிமுக தொகுதி ஒதுக்காதது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் போட்டியிடுகிறார். நாம் தமிழர் சார்பாக ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். கடந்த முறை இங்கு போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர் மகேந்திரன் 84,979 வாக்குகள் பெற்றார். இம்முறையும் கணிசமான வாக்குகளைப் பெறுவார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியானது திமுகவுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக திமுக 8 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய சிட்டிங் எம்.பியாக இருப்பவர் திமுகவின் டி.ஆர்.பாலு. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். நீண்ட அனுபவம் கொண்டவர். இத்தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுமே திமுக கூட்டணி வசமே உள்ளது.

திமுகவின் வலுவான கூட்டணி, மகளிர் திட்டங்கள், தேர்தல் பணி, இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகள் உள்ளிட்ட காரணங்களால் இத்தொகுதியில் முதலிடத்தை திமுக பெறும். 2வது இடத்தை பிடிப்பதில் அதிமுகவும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்கிறார்கள்.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.