சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த வீட்டு உபயோக சௌகரியப் பொருட்களை சுலப தவணையின் வாயிலாக அவர்களின் இல்லங்களுக்கே கொண்டுசேர்த்த வசந்த் அன் கோ வின் உரிமையாளர் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மகனும் நடிகருமான சிட்டிங் எம்பி விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியில் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜகவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுகவில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சியில் மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி. வருவாய்த்துறை ரீதியான ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்டமும் மக்களவைத் தொகுதிக்குள் அடக்கம். இரண்டு முறை காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி என்ற பெருமைக்குரியது கன்னியாகுமரி. இங்கு அதிக முறை காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு தொகுதியைக் கைப்பற்றினார் தொழிலதிபரும், காங்கிரஸ் தலைவருமான ஹெச்.வசந்தகுமார். உடல்நலக் குறைவால் அவர் மறைந்துவிட, ஏப்ரல், 2021-ல் நடந்த இடைத்தேர்தலில், 38 வயதே ஆன அவரின் மகன் விஜயகுமார் என்கிற விஜய் வசந்த், தி.மு.க கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாஜக சார்பில், 69 வயது மூத்த அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அந்த இடைத்தேர்தலில், பொன்னாரை 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் விஜய் வசந்த்.
கன்னியாகுமரி தொகுதிக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்துள்ளேன் என பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். கடந்த முறை இழந்த வெற்றி வாய்ப்பை இப்போது பிடித்தே ஆகவேண்டும். நாமும் வெற்றிபெற்று மத்தியிலும் பாஜக வெற்றிபெற்றால் மத்தியமைச்சராக தொகுதியை ஒரு ரவுண்ட் வரலாம் என தீவிரமாக வாக்குச்சேகரிப்பு நடத்தி வருகிறார். அதிமுகவிலும், நாம் தமிழர் கட்சியிலும் மீனவர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் காங்கிரஸின் வாக்கு வங்கியான மீனவர்கள் வாக்குகளை கணிசமாக பெறுவார்கள். அதன் மூலம் தங்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பொன்னார் தரப்பு கணித்திருக்கிறது.
அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் மீனவ முக்குவர் சமூகத்தை சேர்ந்தவர். வெளி நாடுகளில் வர்த்தகம் செய்கிறார். 38 ஆண்டுகளாக அரசியலில் போட்டியிட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பசிலியான் நசரேத், திமுக மீனவர் அணி அமைப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அதிமுகவில் இணைந்து, தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுள்ளார். ஆர்.சி. மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மீனவர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் இவருக்கு கணிசமாக கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆளும் கட்சியான திமுக தலைமையிலான ஒரு அணியும், பிரதான எதிர்கட்சியான அதிமுக ஒரு அணியாகவும், பாஜக தலைமையிலான ஒரு அணியும் தேர்தல் களத்தை சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து தனித்து களம் காண்கிறது.
தொடக்கத்தில் இருந்தே கன்னியாகுமரி மக்கள், தேசிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.மாநிலக் கட்சிகளை விட தேசியக் கட்சிகளுக்கே இங்கு செல்வாக்கு அதிகம். தமிழகத்தில் அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்றாலும், அனைத்து தேர்தல்களிலும் சாதி ரீதியான வாக்குகளைவிட மதரீதியான வாக்குகளே இந்த தொகுதியில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. மீனவ சமுதாயத்தினரும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இஸ்லாமியர்கள், வெள்ளாளர், கிருஷ்ணவகை, நாயர், விஸ்வகர்மா, செட்டியார், பட்டியலினத்தவர், யாதவர், மலை சாதியினரும் பரவலாக உள்ளனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி இணைந்துள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். சிறுபான்மை வாக்குகள் இந்தக் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்கும். ஆளுங்கட்சியாக திமுகவின் மகளிர் திட்டங்கள் கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும்.
விஜய் வசந்த் தான் எம்பியாக இருந்து, தன்னால் இயன்றளவு வளர்ச்சித்திட்டங்களை கொடுத்துள்ளார்.தனது சொந்தச் செலவில் தொகுதி மக்களுக்குக் கல்வி, மருத்துவ ஊக்கத்தொகை, விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை என ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உதவி செய்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பள்ளிக் கட்டடங்கள், சமூக நலக்கூடங்கள் உள்ளிட்ட உட்கட்மைப்பு வசதிகளை செய்துள்ளார். எளிமையபன அணுகலாம், நன்றாக பழகுவார், நல்ல மனிதர் என்கின்றனர்.
வசந்தகுமார் கடந்த 2019 தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்னாரை தோற்கடித்தார். 2021 இடைத்தேர்தலில் விஜய் வசந்தை கன்னியாகுமரி மக்கள் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர். இம்முறையும் அதே வெற்றியை அளிப்பார் என்கின்றனர்.
ஆம்.. குமரியில் ‘கை’ ஓங்குகிறது.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.