இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பைனான்ஸ் தொழிலில் கொடிகட்டிப் பறப்பதால், பணத்தையே விற்கும் ஊர் கரூர் என்பார்கள்.
கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர், திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை என்று நான்கு மாவட்டங்களிலுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகள், கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகின்றன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 4,20,576 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.
கொங்கு வெள்ளாளர் கவுண்டர், ஊராளிக் கவுண்டர், பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள், முத்தரையர், தெலுங்கு பேசும் நாயக்கர்கள் எனப் பலவாறான சமூக மக்கள் இந்த தொகுதியில் கூடி வாழ்கின்றனர்.
திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஜோதிமணி, அதிமுகவில் தங்கவேல், பாஜகவில் வி.வி.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியில் ரெ.கருப்பையா மற்றும் வேறு சில கட்சிகள், சுயேட்சைகள் உட்பட 54 வேட்பாளர்கள் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டிலேயே அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுவது இந்த தொகுதியில் தான்.
திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, அடிப்படையிலேயே போராட்ட குணம் கொண்டவர். சிறுவயது முதலே அரசியல் ஈடுபாடு கொண்டவர். ராகுல் காந்தியின் அபிமானத்தைப் பெற்றவர். லோக்கல் மற்றும் மாநில கதர்களின் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் கரூரில் மீண்டும் வேட்பாளராகியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த வளர்ச்சித்திட்டங்களை முன்வைத்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், திமுகவினர் தங்களின் பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் சில சர்ச்சைகள் இவர்மீது எழுந்தாலும், அது எந்த வகையிலும் மக்களை பாதிக்கவில்லை என்கிறார்கள். அவற்றையெல்லாம் கடந்து ஜோதிமணிக்கு தொகுதிக்குள் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்கமுடியாது.
அதிமுக வேட்பாளர் தங்கவேல் தற்போது எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளராக உள்ளார். ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். மாவட்டத்தின் பல முக்கிய தலைகளே சீட் கேட்க ஒதுங்கிவிட்டது. விருப்பத்தின் அடிப்படையில் வேட்பாளராகியுள்ளார். அதிமுகவின் சாதனைகளையும், திமுக அரசின் வேதனைகளையும் முன்வைத்து வாக்குச்சேகரித்து வருகிறார். இவ்வளவு வெயிலில் இலை என்ன ஆகுமோ?
பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் முன்னர் அதிமுகவில் இருந்தார். அதிருப்தியால் வெளியேறி பாஜகவில் இணைந்தார். தேர்தல் பணி செய்த அனுபவங்கள் உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியை விரும்புபவர்களும் மாநில அரசை விரும்பாதவர்களின் ஓட்டுகள் முழுவதுமாக தன்னை வந்து சேரும் என எண்ணுகிறார். பாஜக தலைவர் அண்ணாமலையின் பிரசாரம் கூடுதல் பலம் என்கிறார். ஓட்டு கிடைக்கும் ஆனா டெல்லிக்கு போக முடியுமா?
சிட்டிங் எம்பி ஜோதிமணி தொகுதிக்குள் நன்கு அறிமுகமானவர். எளிமையாக அணுகமுடியும். திமுக-காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைத்து களம் காண்கிறது. திமுக அரசு மகளிர் திட்டங்களை அளித்துள்ளது. பெண் வாக்காளர்களும் பதிலுக்கு தங்கள் வாக்குகளை பெண் வேட்பாளர் ஜோதிமணிக்கு வழங்குவார் என்கின்றனர். கரூரில் இம்முறையும் ஜோதிதான் என்கிறார்கள்..
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.