ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துள்ளது.இதனால் உள்ளூர் மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று கூறும் வனத்துறை அதிகாரிகள், இது உச்சநீதிமன்ற உத்தரவு என்பதால், வனத்துறை நடைமுறைப்படுத்தாவிடினும் நடைமுறைக்கு வந்துவிடும் என்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வால்பாறை, டாப்ஸ்லிப் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் 1479.87 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.இதில் 958 சதுர கி.மீ. பரப்பு புலிகளின் வாழ்விடத்தை உள்ளடக்கிய உள்வட்டப்பகுதியாகவும் (Core Zone), மற்ற பகுதிகள் வெளிவட்டப்பகுதியாகவும் (Buffer Zone) உள்ளன.
காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதியில் மட்டும் 63 தனியார் தேயிலைத்தோட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.அனைத்து தேயிலைத் தோட்டப்பகுதிகளும், கிராமங்களும், குடியிருப்புகளும் வால்பாறை நகராட்சிக்குள் இடம் பெற்றுள்ளன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கு 70,859 மக்கள் வசித்து வந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரித்துள்ளது.

கடையடைப்பு
வால்பாறையை உள்ளடக்கியுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக (ESZ-Eco Sensitive Zone) அறிவித்து, கடந்த ஆண்டு டிசம்பரில் இதற்கான வரைவு அறிவிக்கை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.அதிலிருந்து 60 நாட்களுக்கு, மக்களிடமிருந்து ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகள் என கருத்துக் கூற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்த வரைவு அறிவிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் கடந்த ஜனவரி 7 அன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.மேலும், வரும் மார்ச் 29 ஆம் தேதியன்று, வால்பாறையிலுள்ள தேயிலைத் தோட்ட நிறுவனங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த மார்ச் 20 ஆம் தேதியன்று, கோவையிலுள்ள தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்கக் கட்டடத்தில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ளுமாறு தோட்ட அதிபர்கள் சங்கம் தரப்பில் பங்கேற்றவர்கள் கேட்டுக் கொண்டனர்.ஆனால் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல வரைவு அறிவிக்கையை ரத்து செய்யாவிட்டால், அனைவருக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஹமீது, ”மாஞ்சோலையைப் போல, வால்பாறையிலிருந்தும் மொத்தமாக மக்களை வெளியே அனுப்புவதற்கான திட்டம்தான் இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல அறிவிப்பு. இதை நடைமுறைப்படுத்தினால், தோட்டங்களில் மருந்து அடிக்கவும், குடியிருப்புகளில் சிறு கட்டட பராமரிப்பு மேற்கொள்ளவும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். இதனால் 30 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்களின் வேலை, வாழ்வாதாரம் எல்லாமே பாதிக்கப்படும்.” என்றார்.

குவாரிகள், சுரங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமே தடை!
இந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் போராடுவதாகக் கூறுகிறார் அண்ணா தொழிலாளர் சங்கத்தின் தேயிலைத் தோட்டப்பிரிவு மாநிலத் தலைவரான ஹமீது. இதை நடைமுறைப்படுத்துவதில் வனத்துறை தீவிரமாக இருப்பதால்தான் தற்போது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதாகக் கூறும் அவர், அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

ஆனால் இது தேவையற்ற அச்சம் என்று சொல்லும் ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் வெங்கடேஷ், ”குவாரிகள், கிரசர்கள், சுரங்கப்பணிகள் மற்றும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் போன்ற பெரிய திட்டங்களுக்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை இப்போதே நாம் அனுமதிப்பதில்லை. மற்றபடி எல்லாமே ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள்தான் (Regulated Activities). இதுபற்றி பலமுறை விளக்கிய பின்னரும் தேவையற்ற தகவல்களை பலரும் பரப்புகின்றனர்.” என்றார்.
மாஞ்சோலையைப் போல, மொத்தமாக மக்களை வெளியேற்றும் திட்டம் என்ற கருத்தையும் கள இயக்குநர் வெங்கடேஷ் மறுக்கிறார். மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடியாது என்பது நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாலை 6 மணிக்கு மேல், வனத்துறையினர் எச்சரித்தும் மீறிச் சென்ற ஜெர்மன் சுற்றுலாப் பயணி யானை தாக்கி இறந்ததாக கூறுகிறார், இந்த நடவடிக்கைகளால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்கிறார் அவர்.
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் – வெங்கஷே் IFS விளக்கம்
மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின்படி, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என்பது என்ன என்பதையும் விளக்கினார் ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் வெங்கடேஷ். புலிகள் காப்பகம், வன உயிரினச் சரணாலயங்களை ஒட்டியுள்ள பகுதிகளின் சூழல் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, 0–10 கி.மீ. துாரத்தை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சில நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன; சில நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள், அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகள் என இவை 3 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுரங்க பணி, மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை, பெரிய நீர் மின் திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மற்றபடி விவசாயப்பணிகள், உரம் தெளிப்பது, மருந்து அடிப்பது, கட்டுமானப் பணி, கட்டடச்சீரமைப்பு, குடியிருப்பு பராமரிப்பு, சாலை சீரமைப்பு, போக்குவரத்து என அனைத்துமே தற்போதுள்ளபடி ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இருக்கும்.
இவற்றைப் பற்றி விளக்கிய கள இயக்குநர் வெங்கடேஷ், ”ஒரு தேயிலைத் தோட்டத்தில் மரம் வெட்டுவதாக இருந்தால் இப்போது தனியார் தோட்ட நிறுவனச்சட்டம் மற்றும் மலைப்பகுதி மரங்கள் சட்டத்தின் அடிப்படையில் முறைப்படி விண்ணப்பித்து, அதற்கு அனுமதி பெற முடியும். மற்றபடி போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துமே இப்போதுள்ள நடைமுறைப்படியே தொடரும்.” என்கிறார்.
ஆனால் இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் நடைமுறைக்கு வந்தால், சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் வால்பாறை நகராட்சியும் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்கிறார், வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ். நுாறாண்டுக்கும் மேலாக வால்பாறையில் குடியிருந்து வரும் மக்களையும், வேலைவாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலைத் தோட்டங்களையும் மொத்தமாக அகற்றுவதற்கான நடவடிக்கை இது என்கிறார் அவர்.
”வால்பாறையிலிருந்து பல சாலைகள் விரிந்து பல எஸ்டேட்களுக்குச் செல்கின்றன. இந்த சாலைகளையும் புலிகள் காப்பகத்திற்குள் கொண்டு வந்து, அவற்றில் செல்ல தடை செய்தனர். அதை எதிர்த்து நாங்கள் வழக்குத் தொடுத்தோம். உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. நாங்கள் மறு முறையீடு செய்யவில்லை. இதில் தமிழக அரசு முடிவெடுத்தாலே தீர்வு கிடைக்கும்.” என்கிறார் ஜெபராஜ்.

எம்பி ஈஸ்வரசாமியின் நிலைப்பாடு என்ன?
”மக்களுக்குப் பாதிப்பு வரும் எந்த அறிவிப்பையும் நாங்கள் எதிர்க்கிறோம். வால்பாறை மக்களுக்கும், சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகளுக்கும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இதை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோம்.”சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் உள்வட்டம், வெளிவட்டம் என்று சொல்கின்றனர். இதைச் செயல்படுத்துவதில் மக்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது. நீலகிரி மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, இதுபற்றி முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவரின் ஒப்புதலுடன் மத்திய வனத்துறை அமைச்சரிடம் இந்த வரைவு அறிவிக்கையில் உரிய திருத்தம் கொண்டு வரவேண்டுமென்று மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.” கண்டிப்பாக செய்து காட்டுவோம் என்கிறார் திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி.
மண்டல எல்லை பகுதிக்கேற்ப மாறும்
இந்த விவகாரத்தில், மக்களுக்கு ஆதரவாக உரிய திருத்தத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்று பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்.வனப்பாதுகாப்பு என்ற பெயரில் வால்பாறையில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதைக் கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
”ஒவ்வொரு பகுதியிலும் குடியிருப்புகளைக் கணக்கிட்டும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த மண்டலத்திற்கான எல்லை வரையறுக்கப்படும். சில பகுதிகளில் ஒரு கி.மீ. ஆக இருக்கலாம். சில பகுதிகளில் 10 கி.மீ. ஆக இருக்கலாம். இதுகுறித்து மக்களுக்கு விளக்குவதற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் கூட்டம் நடத்தவுள்ளோம். இது உச்சநீதிமன்ற உத்தரவு என்பதால் நாங்கள் நடைமுறைப்படுத்தாவிட்டாலும் அது தன்னிச்சையாக நடைமுறைக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது.” என்கிறார் கள இயக்குநர் வெங்கடேஷ்.
இதை மறுக்கும் ஜெபராஜ், ”அப்படியொரு உத்தரவு எதுவுமில்லை. இதை நடைமுறைப்படுத்த முடியாது என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது. கேரளாவில் இதை நடைமுறைப்படுத்தினால் 50 சதவீதம் மாநிலம் பாதிக்கப்படும் என்பதால் அந்த அரசு இந்த முடிவை எடுத்தது. அதேபோல இங்கும் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். இதனால் வால்பாறை மட்டுமின்றி சமவெளி மக்களும் பாதிக்கப்படும் நிலையில், அதைப்பற்றி அவர்கள் விழிப்புணர்வுமின்றி இருக்கின்றனர்.” என்கிறார்.
ஆனால் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிக்கும், மண்டலத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று கூறும் கள இயக்குநர் வெங்கடேஷ், இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கருத்துக் கேட்பு நடத்தி, தோட்ட நிறுவனங்கள் சார்பிலும் கருத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திட்டமே இப்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார் அவர்.
இப்போதெல்லாம் இயற்கை கோட்பாடுகளை மனிதன் வகுக்கத் தொடங்கிவிட்டான்..