சமூக வலைத்தளங்களில் மழை பற்றியும் சென்னை வெள்ளம் பற்றியும் பரவி வரும் செய்திகளுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்துள்ளார். முன்பு எல்லாம் ஜாதகம் பார்த்து தனது அன்றாட விசயங்களைச் செய்பவர்கள் அதிகம் இருந்தார்கள். அதனால்தான் அந்தக் காலத்தில் பஞ்சாங்கம் என்பது லட்சக் கணக்கில் விற்பனையாகி வந்தது. பல்லி விழுந்தால் என்ன சகுனம்?, காக்கா கத்தினால் என்ன ஆகும்? என்று பஞ்சாங்க பேராசிரியர்கள் அதிகம் இருந்தார்கள். இப்போது அந்தக் காலம் மலையேறிவிட்டது. பஞ்சாங்கத்தைக் கண்ணால் பார்த்த தலைமுறையே இன்றைக்கு இல்லை. எல்லாம் அறிவியல் வளர்ச்சியால் கிடைத்த நன்மைஆனால், இதே அறிவியல் வளர்ச்சியால் சில பாதகமும் நடந்து வருகிறது.

கோப்பு படம்

இயற்கையாகப் பெய்யக் கூடிய மழையை முன்கூட்டியே கணிப்பதாகச் சொல்லி பலர் வாட்ஸ் அப் யூனிவர்சிட்டியில் தகவல்களைப் பெற்று சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்கள். கேரள மாநிலம் வயநாடு போல ஊட்டி மாறப்போகிறதா? சென்னை மழையால் மூழ்க போகிறதா? செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை சந்திக்கப் போகும் ஆபத்து என பலரும் யூடியூப்பில் அடித்து விடுகிறார்கள். தம்நெய்ல் வைத்து மக்களை ஈர்த்து வீவ்ஸ் பெறுவதற்காக இப்படி பலர் கட்டுக்கதைகளைக் கட்டி விடுகிறார்கள். இதற்கு எல்லாம் வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

கோப்பு படம்

அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், “தென்மேற்கு பருவ மழையைப் பொறுத்தவரைச் சென்னையில் காலையில் வெளியில் அடிப்பதும் மாலையில் மழை வருவது வழக்கமாக இருக்கக் கூடிய ஒரு வானிலைதான். காலையிலிருந்தே கன்னியாகுமரி, வால்பாறை, நீலகிரி ஆகிய ஊர்களில் மழை பெய்யலாம். அந்த வானிலை சென்னைக்குப் பொருந்தாது. தமிழ்நாட்டில் உள்ள 95% நிலப்பகுதிகளில் இரவு இடியுடன் மழை, காலை வெயில். இதான் இயல்பான நிலை. ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை இதே சூழலே நீடிக்கும். அக்டோபருக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்க ஆரம்பித்துவிடும். நமக்கு கிடைத்துள்ள மழை பற்றிய பழைய ஆவணங்களை வைத்துக் கணக்கிட்டுப் பார்க்கும்போது மழையின் அளவு அதிகரித்துள்ளதை அறிய முடிகிறது. உதாரணமாகச் சென்னையில் எடுத்துக் கொள்வோம். இங்கே அதிகபட்ச ஒரே நாளில் 200 மிமீட்டர் மழையை அளவுகோலாக எடுத்துக் கொள்வோம். ஆசியக் கண்டத்தில் பல ஆண்டுகளாகவே சென்னை ஒரு வளர்ந்த நகரம். இங்கே 1813இல் இருந்து பெய்த மழை பற்றிய டேட்டாக்கள் இருக்கின்றன. இந்த 200 வருடங்களில் 10 அல்லது 13 முறைதான் ஒரே நாளில் 200 மிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. ஆனால், 2000 முதல் 2024 வரையான காலகட்டத்தில் ஒரே நாளில் 200 மிமீட்டர் மழை 20 முறைக்கு மேல் பெய்துவிட்டது. இதை வைத்துக் கணிக்கும்போது ஒரே நாளில் அதிக கனமழை பெய்வது அதிகரித்துள்ளதை உணர முடிகிறது. முன்பு எல்லாம் 50 நாட்களில் 1000 மிமீட்டர் மழை நமக்கு கிடைக்கும். இப்போது 30 நாட்களிலேயே அந்த 1000மிமீ மழையை நாம் பெற்றுவிடுகிறோம். இப்போது ஆந்திரா, குஜராத். தெலங்கானாவில் கனமழை பெய்துவருவதை நாம் பார்க்கிறோம். இது இயற்கையாக நடப்பதுதான். ஒரு காற்றழுத்த பகுதி உள்ளே செல்லும் போது அதைச் சுற்றி உள்ள அடர்ந்த மேகங்கள் தொடர்ந்து மழை வரவே செய்யும். மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே உடனே கரையைக் கடந்திருந்தால் இவ்வளவு மழை வெள்ளம் வந்திருக்காது. அந்தப் புயல் ஒருநாள் முழுக்க தங்கிக் கரை மெதுவாகக் கடந்தது. ஆகவே, அதிகன மழையால் நாம் பாதிக்கப்பட்டோம்.

கோப்பு படம்

400 டூ 450மிமீ மழையானது ஒரே நாளில் பதிவானது. இதைப் போன்று இந்த ஆண்டும் ஒரு காற்றழுத்த பகுதியோ, புயலோ உருவானால் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கும். அதை இப்போதே சொல்ல முடியாது. அது எங்கே உருவாகிறது என்பதைக் கொண்டுதான் பாதிப்பை உணர முடியும்.இந்த ஆண்டு வரப்போகும் புயலும் சென்னையை மட்டுமே தாக்கும் என நினைப்பது தவறு. கடலோர பகுதியான கடலூர், நாகப்பட்டினம் என வேறு இடங்களில் கூட தாக்கத்தை உருவாக்கலாம். கடந்த 2006இல் பெரிய மழை வந்தது. 1999இல் பெரிய மழையை நாம் பார்த்தோம். அந்தக் காலகட்டத்தில் சென்னையின் புறப்பகுதிகளான முடிச்சூர், வரதராஜபுரம் போன்றவை நகரமயமாகவில்லை. இன்று நகரம் வளர்ந்து கொண்டே உள்ளது. கடந்த 50 ஆண்டுகள் முன்னால் பெரிய மழை பெய்தபோது புறப்பகுதிகளில் வெள்ளம் வந்த உடனேயே வேகமாக வடிந்துவிட்டது. அன்றைக்கு வீடுகள் இல்லை. தண்ணீர் செல்ல தடை இல்லை. இன்று பல இடங்கள் மிகப்பெரிய நகரமாக மாறிவிட்டது. இன்றும் அதே அளவுதான் மழை பெய்கிறது. ஆனால், நீர் வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது. உடனே குடியிருப்புகளில் புகுந்துவிடுகிறது. இதுதான் முக்கிய காரணம்.

கோப்பு படம்

இந்த சென்னை நகரம் 150 மிமீட்டர் வரை தாங்கும். அதைத்தாண்டும் போது பள்ளிக்கரனை போன்ற பகுதிகளில் வெள்ளம் வெளியேற 4 நாள்கள் ஆகும். இதை வைத்து உடனே சென்னையின் கடல் மட்டம் உயர்ந்துவிடும். சென்னை மூழ்கிவிடும் எனப் பீதியைக் கிளப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை. யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். அதேபோல செப்டம்பர் 15 மேல் ஒரு வெள்ளம் வரும் என்பது பொய். வழக்கமாக இந்த மாதத்தில் 150 மிமீ மழைதான் பெய்யும். வரலாற்றில் அதற்கு மேல் பெய்ய வாய்ப்பே இல்லை. அது வதந்திதான்” என்று கூறியிருக்கிறார்.