காமெடி நடிகர்கள் வடிவேலு & சிங்கமுத்து கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் 10 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. தாம்பரம் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக, தன்னை மோசடி செய்துவிட்டதாக சிங்கமுத்து உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் வடிவேலு. இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கமுத்து யூடியூப் சேனல்களில் தன்னை அவதூறாக பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து தரப்புக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மையில்லாத பல பொய்களை கூறி, தரக்குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வடிவேலு, சிங்கமுத்து

அதில், பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி, நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில்மனு தாக்கல் செய்யவும் இரு வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

திரைத்துறையில் மறைந்த நடிகர் விஜயகாந்தால் படவாய்ப்புகள் பெற்ற வடிவேலு பின்னாளில் விஜயகாந்த்தையே கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார். தற்போது வடிவேலுவால் ஏற்றம் பெற்ற சிங்கமுத்து அவருக்கு எதிராக திரும்பியுள்ளார் என்பதுதான் காலத்தின் கோலம்…