கடலூரில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்டு இயக்குநர் தங்கர் பச்சான் 3ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். இருப்பினும் ஓட்டளித்தவர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சியில் தங்கர் பச்சான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். சும்மா நல்ல உடை உடுத்திகிட்டு மேக்கப் போட்டுக்கிட்டு உள்ளே போய் விரலில் மையை பூசிக்கொண்டு வந்து டிவியை பார்த்துவிட்டு இருப்பது தான் தேர்தலா? உங்களுக்கு எல்லாம் எதுக்கு வாக்கு?
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவியது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் தற்போது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் கடலூர் லோக்சபா தொகுதியில் 3ம் இடம் பிடித்து தோல்வியடைந்தாலும் கூட இயக்குநர் தங்கர் பச்சான் பொதுமக்களுக்கு நன்றி கூறி வருகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே. விஷ்ணு பிரசாத் 4,55,053 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2,69,157 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட இயக்குநர் தங்கர் பச்சான் 2,05,244 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் வேட்பாளர் மணிவாசகம் 57,424 ஓட்டுகள் பெற்றார்.
இந்நிலையில் தான் தன்னை நம்பி தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு இயக்குநர் தங்கர் பச்சான் பிரசார வாகனத்தில் பயணித்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தான் நன்றி தெரிவிக்கும்போது அவர் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். அதாவது தேர்தலில் பொதுமக்கள் தங்களின் ஓட்டுகளை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறி அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:
எதுக்கு உங்களுக்கெல்லாம் வாக்கு? உங்களுக்கெல்லாம் தேர்தல்? அடுத்த முறையாவது தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறிலும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருக்கு என்று. ஓடிஓடி உழைக்கிறீங்க? இந்த உழைப்பு எதுக்காக? உங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக, மருத்துவ செலவுக்காகவும், ஏதோ சிறு சேமிப்புக்காகவும் தானே. நல்ல அரசாங்கம் அமைந்தால் உங்களின் பாதி கஷ்டம் குறைந்துபோகும். அதனை தேர்ந்தெடுக்க உங்களுக்கு இதுவரை தெரியவில்லையே.
எனக்கு இது அவசியமற்ற ஒன்று. இந்த வெயிலில் நான் உங்களிடம் ஓட்டு கேட்டேன். இப்போது மறுபடியும் உங்களிடம் நன்றி தெரிவிக்க வந்து இருக்கிறேன். புரிந்து கொள்ளுங்கள். இனியாவது மாறுங்க. எனக்கு இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக இருக்கு. கடலூரில் 17 எம்பிக்களை தேர்வு செய்து உள்ளீர்கள். இதுவரை ஒருவரையாவது உருப்படியா தேர்வு செய்து இருக்கிறீர்களா? இனிமேலாவது உங்களின் கையில் உள்ள வாக்கை கவனமாக பயன்படுத்துங்கள். என்னை மதிச்சி, என் மீது நம்பிக்கை வைத்து இவன் நல்லது செய்வான் என்று எனக்கு வாக்களித்தீர்கள் பாருங்க.. அந்த மக்களுக்கு அன்பையும், என் நன்றியையும் தெரிவிக்கிறேன். எப்போதும் சொன்னதுபோல் உங்களுடன் தான் நான் இருக்கிறேன்” என பேசியுள்ளார்.
தங்கர் பச்சான் நன்றி சொல்ல வந்தாரா இல்லை வாக்காளர்களை வசைபட வந்தாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்?