திமுக கூட்டணி 40/40 வெற்றி பெற்றதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதிமுக கூட்டணி இரண்டு இடங்களையாவது கைப்பற்றும், பாஜக கூட்டணியில் பாமக-செளமியா அன்புமணி, டிடிவி உள்ளிட்டோர்களுக்கு வாய்ப்பு இருக்காலம் என கருதினேன்.

சிறுபான்மை மக்களின் வெறுப்புணர்வை புரிந்துகொண்ட அதிமுக, விட்டால் போதும் என பாஜக கூட்டணியை விட்டு கழண்டு கொண்டது. தன்மீது படிந்துள்ள காவி முத்திரையை அழிக்க சிலகாலம் தேவைப்படும் என்பதால் அதிமுகவின் இலக்கு 2026 என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதனால் தான் வலுவான வேட்பாளர்கள், செலவுகள் என எதிலும் ஆர்வம் காட்டவில்லை. போதாக்குறைக்கு 10.5 சதம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தும் பாமகவை கூட்டணிக்கு இழுக்க எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை என்பதும் மைனசாகவே பார்க்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் சிலரை போட்டியிடச் சொல்லியும் அவர்கள், எடப்பாடியின் வார்த்தைக்கு மதிப்பளிக்காது போட்டியிடாமல் ஜகா வாங்கிக்கொண்டனர். ஆக எடப்பாடி அதிமுகவின் ஆளுமை மிக்க தலைவராக இன்னும் உருவெடுக்கவில்லை என்றே கருதப்பட வேண்டியுள்ளது. கொங்கு மண்டலம் தவிர்த்து தென்மாவட்டங்களில் அதிமுக வலுவிழந்தே உள்ளது.

தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் வளர்ந்த கட்சிகளைப்போல அதனால் ஆதிக்கம் செலுத்த முடியாது. பாமகவை கூட்டணிக்குள் வம்படியாக இழுத்துக்கொண்டது. கொள்கையே இல்லாத தமாக மற்றும் சில கட்சிகளை இணைத்து களம் கண்டு, குறிப்பிட்ட சில தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கும் வந்துள்ளது. வட மாவட்டங்களில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் பெரும்பாலும் பாஜகவினுடையது அல்ல! பாமகவினுடையது. மோடியை விரும்புகிறவர்கள், திமுகவின் மீது எதிர்ப்பு நிலையில் உள்ளோர்கள் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.

பாஜகவின் தேர்தல் வியூகம் என்பது மத்திய அமைச்சர், ஆளுநர், மாநில தலைவர் போன்ற பிரபலமான முகங்களை களமிறக்கியதுதான். தமிழகத்தில் பாஜகவுக்கென்று அதிக பிரபலமடைந்த தலைவர்கள் இல்லை, மாறாக நயினார் நாகேந்திரன், சரத்குமார் போன்ற மாற்றுக்கட்சியினர்களை தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு பாஜகவின் முகமாக காட்டி வருகிறார்கள்.அதிக வாக்காளர்களைக் கொண்ட அதிமுகவையே குறிப்பிட்ட தொகுதிகளில் பின்னுக்குத்தள்ளியது தற்போதைய நிலவரம் என்றாலும், இனிவரும் காலங்களில் அதற்கு அதிமுக இடம் தராது என்று தோன்றுகிறது.

விஜயகாந்த் இறந்த பின்னர் தமிழகமே சோக கீதம் வாசித்தும் ஏன் அவரின் மகனே விருதுநகரில் போட்டியிட்டும் வெற்றி கிட்டாமல் போய்விட்டது. அதிமுகவிற்கு பதிலாக திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் வென்றிருக்கும். எம்பிக்களையும் பெற்றிருக்கும். கட்சியையும் உயிர்ப்போடு வைத்திருக்கலாம். ஆனால், பிரேமலதா வலுவற்ற நிலையில் இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தவறிழைத்துவிட்டார். தேமுதிகவை மீண்டும் பலிகொடுத்து விட்டார்.

தமிழகம் முழுவதும் பத்திரிகை கருத்துக்கணிப்புக்காக  சென்றிருந்தோம். அப்போது; கடந்த முறை ஆரணியில் காங்கிரஸ் சார்பில் வென்ற விஷ்ணுபிரசாத் தொகுதிப்பக்கமே தலை காட்டாமல் கடும் அதிருப்தி என வாக்காளர்கள் கூறிவந்தனர். இதனால் கடலூர் தொகுதிக்கு மாறினார். தற்போது 1 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

வேலூர் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மீது கட்சிக்காரர்களும், பொதுமக்களும் புகார் வாசித்தனர். திருச்சியில் போட்டியிட்ட துரைவைகோ தனிச்சின்னத்தில் போட்டியிடுவதால் வாய்ப்பு குறைவு, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா சென்னைக்காரர் தேறுவது கடினம், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்குள் தலை காட்டமாட்டார் அவரெல்லாம் எங்கு ஜெயிக்க போகிறார் என்றனர்.

அனைத்துமே தவிடுபொடியானது. தமிழக மக்களின் பெரும்பான்மையான நிலைப்பாடு ஆட்சி மாற்றம் என்பது மட்டுமே தமிழகத்தில் பலித்துவிட்டது.

-அ.முக்தார், உதவி ஆசிரியர்.