விழுப்புரம் நகரப் பகுதியில் E.S. ஆர்த்தோ கேர் என்ற மருத்துவமனையை மருத்துவர் E.S. அறிவழகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக சந்தோஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
ஆனாங்கூர் பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நேற்று (மே-03) இடுப்பு வலிக்காக சிகிச்சை பெற சென்றுள்ளார். சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணிடம் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறி அப்பெண் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டார்.
இதனையடுத்து அப்பெண் தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், பிசியோதெரபிஸ்ட் சந்தோஷை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசர் பிசியோதெரபிஸ்ட் சந்தோஷ் மீது பெண்களை பாலியல் ரீதியில் தொடுதல் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவது என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இளம்பெண்ணிடம் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.