நீலகிரி மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றியை பதிவு செய்த சிட்டிங் எம்பியும்,முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் உயரிய பதவியான துணை பொதுச் செயலாளர்களில் ஒருவருமான ஆ.ராசா எம்பியாக உள்ளதால் இந்த மக்களவை தொகுதி ஏற்கெனவே விஐபி அந்தஸ்தில் உள்ளது. விஐபி தொகுதிக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் பாஜகவை சேர்ந்த இந்நாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவதால் குளிர் பிரதேசத்தில் அனல் பறக்கிறது.
திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ்,நாம் தமிழர் சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இங்கு திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
நீலகிரி மக்களவை தொகுதியில் பவானிசாகர், அவினாசி, மேட்டுப்பாளையம், குன்னூர், உதகமண்டலம், கூடலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. அதிகப்படியாக ஏழு முறை காங்கிரஸ், மூன்று முறை திமுக, இரண்டு முறை அதிமுகவும் தொகுதியை கைப்பற்றியுள்ளது.
குன்னூரில் திமுகவும், உதகையில் காங்கிரஸ் தவிர மீதமுள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக எம்எல்ஏக்கள் பதவி வகித்து வருகின்றனர்.இந்த மக்களவை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 5,73,624 இதில் 2,74,497 ஆண் வாக்காளர்களும்,2,99,107 பெண் வாக்காளர்களும், 20 நபர்கள் மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
ஆ.ராசா
ஆ.ராசா தி.மு.க-வின் பெரம்பலூர் ஒன்றியச் செயலாளராக அரசியலைத் தொடங்கி, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உயர்ந்தவர்.தேர்ந்த வழக்கறிஞர்.கலைஞரின் அபிமானத்தைப் பெற்றவர்.மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரில் தொடங்கி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர்,மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்தவர் என்ற நீண்ட வரலாறு கொண்டவர். தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்தபோதுதான், 2ஜி விவகாரம் வெடித்தது.2ஜி வழக்கில் தானே திறமையாக வாதாடி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார் ஆ.ராசா.
நீலகிரி மக்களவை தொகுதியில், தாளவாடி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான அரசுக் கல்லூரி கனவை நிறைவேற்றியது, நீண்டநாள் பிரச்சனையான ‘டேன் டீ’ தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்ததோடு, நான்கு ஆண்டுகள் கழித்து தீபாவளி போனஸ் கிடைக்க முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.லிங்காபுரம் பகுதியில் பெரிய மேம்பாலம் அமைத்தது போன்ற இன்னும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்.மேட்டுப்பாளையத்திலும், ஊட்டியிலும் இரண்டு எம்பி அலுவலகங்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, உரிய தீர்வு கண்டு வருகின்றார்.
த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்
அவிநாசி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான தனபாலின் மகன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுக வேட்பாளராகியுள்ளார். ஐடி நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ், அவிநாசி தொகுதியின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது முதல் முறையாக தேர்தலில் களமிறங்கும் லோகேஷ், சமதள பகுதிகளான அவிநாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் பகுதிகளில் நன்கு அறிமுகமானவர்.தந்தை தனபால் மட்டுமே இவரின் வலுவான அடையாளம்.மற்றபடி சொல்லிக் கொள்ளுமளவிற்கு இவரைப்பற்றி ஏதும் இல்லை என்கின்றனர்.
எல்.முருகன்
எப்படியும் நீலகிரி மக்களவையை ைகப்பற்றியே ஆகவேண்டும் என்று மத்திய இணை அமைச்சரான எல்.முருகனை களமிறக்கியுள்ளது பாஜக.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும்,தமிழ்நாடு பாஜக தலைவராகவும் பதவி வகித்தவர்.2021 சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.பின்னர் மத்திய இணை அமைச்சராக்கப்பட்டார்.மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2 முறை ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டவர்.
நீலகிரி மாவட்டத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகளின் தாக்கம் சற்று அதிகம்தான்.இருப்பினும் காங்கிரஸ் அளவிற்கு பாஜக இங்கு வலுவாக இல்லை. பாஜகவுக்கான கணிசமான வாக்குவங்கி உள்ளது.அதேபோல கடந்த 2019 தேர்தலில் அமமுக 40,419 வாக்குகளை பெற்றுள்ளது.ஆனால் தற்போது அமமுக நிர்வாகிகள் பலர் பிற கட்சிகளில் ஐக்கியமாகி விட்டதால்,அமமுக கூட்டணியால் பாஜகவுக்கு இங்கு பலன் இல்லை. எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் என்ற இமேஜ் உள்ளது.ஆனால் அது வெற்றிக்கு உதவாது என்கின்றனர்.
இங்கு திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவினாலும் பாஜக இரண்டாம் இடம் பிடிப்பதே சிரமம்.ஆ.ராசாவிற்கு தொகுதிக்குள் நல்ல அறிமுகம் உண்டு. தனது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் எஸ்டேட் தொழிலாளர்களாக இருப்பது கூடுதல் பலம். தேர்தல் களங்களில் மிகுதியான அனுபவத்தை பெற்றவர்.கட்சி நிர்வாகிகள் திமுகவின் சாதனைகளை சொல்லி தீயாக வேலை செய்து வருகிறார்கள். ஆ.ராசா மேலிட தலைவர் என்பதால் கோஷ்டி பூசலுக்கு வழியில்லை.
ஆளுங்கட்சி என்பதால் கரன்சி மழையும் பொழிகிறது.திமுகவிற்கு இம்முறை வலுவான கூட்டணி வாய்த்துள்ளது.கடந்த 2019-இல் மநீம 41,169 வாக்குகளை பெற்றுள்ளது.இம்முறை அக்கட்சி கூட்டணியில் உள்ளால் மேலும் பலம் கூடியுள்ளது.அதிமுகவிற்கு கூட்டணி பொய்த்துள்ளது.திமுகவில் தொண்டர்களின் கவனிப்பில் குறையிருக்காது.அதிமுகவில் எதிர்கட்சி என்பதால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொகுதிக்குட்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பாக்கெட்டுக்குள் கைவிடுவதில்லை. ஆளுங்கட்சி என்ற இமேஜ், தேர்தல் வியூகம் போன்றவற்றையெல்லாம் கரைத்துக்குடித்த ஆ.ராசாவிடம் புதுமுகமான லோகேஷ் மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர்கள் மீடேறுவார்களா?
மக்கள் மனநிலை,தேர்தல் பணி,கூட்டணிபலம் என இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது,தற்போதைய களநிலவரப்படி மலைகளின் ராணியின் மணிமகுடம் ராசாவுக்கே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.