விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பெருமளவு மலைசார்ந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்தத் தொகுதியில், விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய பேரவைத் தொகுதிகளும், அருகே உள்ள சேலம் மாவட்டம், கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய பேரவைத் தொகுதிகளும் அடங்கியுள்ளன.
கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் பொன்.கௌதம் சிகாமணி போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி ஆக உள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக தியாகதுருகம் நகர செயலாளர் மலையரசன், அதிமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் குமரகுரு, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக மாநில துணை தலைவர் தேவதாஸ், நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இத் தொகுதியில் பட்டியலினச் சமுதாயத்தினரும், வன்னியர் சமுதாயத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர். உடையார், கார்காத்த வேளாளர், கொங்கு வேளாளக் கவுண்டர்கள், நாயுடு, பழங்குடியினர், இஸ்லாமியர், கிறிஸ்தவச் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கூடி வாழ்கிறார்கள்.
திமுக வேட்பாளர் மலையரசன் தேர்தல் களத்தில் மகிழ்ச்சியுடன் வாக்குச்சேகரித்து வருகிறார். ஹோட்டல் கடையில் பணி செய்யும் தொழிலாளர்களுடன் இணைந்து தோசை ஊற்றி வாக்கு சேகரிப்பதும், தாளமடித்து ஆட்டம் ஆடியபடியும் வாக்குச்சேகரிப்பதையும் வாக்காளர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். அதோடு, வாக்காளர்களிடம் திமுக அரசின் 3 ஆண்டு சாதனைகளையும் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கடந்த முறை ஓகே ஆனால் இம்முறை விடுவதாக இல்லை என்று விட்டதை பிடிக்க அதிமுகவினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக வேட்பாளர் குமரகுரு, அதிமுக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியதாகவும் திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வன்னியர் சமூக வாக்குகள் மொத்தமாக கிடைக்கும் என தேர்தல் பணியாற்றி வருகிறார் பாமக வேட்பாளர் தேவதாஸ். பாமகவிற்கு பலம் வாய்ந்த தொகுியாக பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு ஆதரவானவர்களும், மத்தியில் மீண்டும் மோடியை விரும்புபவர்களும் தங்களுக்கு வாக்களிப்பார் என நம்புகிறார். பாமக தலைவர்களின் பிரச்சாரம் மேலும் வலுச்சேர்க்கும் என்கிறார்கள்.
திமுக வேட்பாளர் மலையரசனுக்கு பக்கபலமாக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு பல தேர்தல்களை சந்தித்த அனுபவத்தை கொண்டு, கட்சி நிர்வாகிகள் மூலம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வெற்றிக்கும் நாங்கள் தான் காரணம், தோல்விக்கும் நாங்கள் தான் காரணம் என்ற ரீதியில் பாமக-நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் இவர்களின் ஓட்டுகளை பிரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி பலம், மற்ற கட்சிகளுக்கு வாக்குகள் சிதறும் நிலை, தேர்தல் பணி, பசை சமாச்சாரம், அமைச்சர்களின் தேர்தல் பணி, திமுக ஆளுங்கட்சி என்ற இமேஜ்களைக் கடந்தும் சற்று இழுபறி நீடி்ககிறது.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.