வன்னியர் மற்றும் பட்டியலினச் சமூக மக்கள் பெரும்பான்மையாகவும், உடையார், யாதவர், நாயுடு போன்ற சமூகத்தினரும் கூடி வாழும் விழுப்புரம் மக்களவை தொகுதியில், கடந்த 2019-தேர்தலில் போட்டியிட்டு எம்.பி-யாக வெற்றிபெற்றவர் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான டி.ரவிக்குமார்.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.

திமுக கூட்டணியான விசிகவில் மீண்டும் டி.ரவிக்குமார், அதிமுகவில், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், பாஜக கூட்டணியான பாமகவில் முரளி சங்கர், நாம் தமிழர் கட்சியில் மு.களஞ்சியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை ரவிக்குமார் எம்.பி உதயசூரியன் சின்னத்தில் நின்ற நிலையில், தற்போது தனிச்சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களிடையே இச்சின்னத்தை கொண்டு செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பு இக்கூட்டணிக்கு உள்ளது. விசிக தலைவர் திருமாவிற்கு இங்கு செல்வாக்கு உள்ளது. கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பும் நன்றாகவே உள்ளதால் தேர்தல் பணிகளில் சுணக்கம் இல்லை.

பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரளி சங்கர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர். களப் பணிகள் ஈடுபட்டு வருகிறார். பாமகவுக்கு மிகுந்த செல்வாக்கு இந்த தொகுதியில் உள்ளதால் அதை நம்பி களமிறங்கியுள்ளார். பாமக தலைவர்களின் பிரசாரம் கைகொடுக்கும் என்கிறார்.

அதிமுகவில் ேவட்பாளர் அறிவிக்கும் முன்னரே தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் வரையும் பணி தொடங்கப்பட்டது. அதிமுகவில் கே.பாக்கியராஜ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  இக்கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெற்றுள்ளது. விஜயகாந்த் மீதான அபிமானம் உள்ள வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர். அந்த வாக்குகள் அதிமுக வேட்பாளருக்கு கிடைக்கும். அதிமுகவை வெற்றிபெறச்செய்ய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் களப் பணியாற்றி வருகிறார்.

சிட்டிங் எம்பி ரவிக்குமார் மீது பெரிய அதிருப்திகள் ஏதும் இல்லை. தன்னால் இயன்றளவு பல வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டுள்ளார். வானூரில் மினி டைடல் பார்க், அரசுக் கல்லூரி, திண்டிவனத்தில் சிப்காட் உள்ளிட்ட மூன்றும் தன்னுடைய வாக்குறுதிகள். அவற்றை நிறைவேற்றியுள்ளார்.

தமிழர் மறுவாழ்வு மையத்தில் தற்போது 440 வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. இருளர் பழங்குடிகளுக்கு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அனைத்துத் தொகுதிகளிலும் தேவைப்படும் பள்ளிகளில் சேர், மேசைகளுடன் கூடுதல் வகுப்பறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். தான் தத்தெடுத்த கிராமங்களான காந்தலவாடி, பேராவூர், நன்னாடு, மாரங்கியூர், முன்னூர் கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, முன்மாதிரி கிராமங்களாக மாற்றியிருக்கிறார்.

மும்முனைப் போட்டி என்றாலும் களம் என்பது திமுக கூட்டணியான விசிகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான். பொன்முடி, மஸ்தான் இரு அமைச்சர்கள் அதிக வாக்குகளில் வெற்றிபெறச் செய்து தன் பலத்தை நிரூபிக்க கடும் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். அதோடு ரவிக்குமாருக்கு தன் சமூக வாக்குகளும் கைகொடுப்பதால் வெற்றி வாய்ப்பில் முந்துகிறார் ரவிக்குமார் ..

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.