2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட தயாராகி உள்ளனர். 2019 மக்களவை தேர்தலை விட, வரும் 2024 தேர்தல் திமுகவிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்கின்றனர். மகளிர் உரிமைத்திட்டம், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல திமுக அரசின் திட்டங்களும், பாஜகவின் எதிர்ப்பு நிலைப்பாடும் உள்ளதால் இது ஸ்டாலின் அலை என்கின்றனர் திமுகவினர்.திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு இதுவரை நான்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மற்றொருபுறம் தேர்தல் பிரசாரப் பணிகளை தொடங்குவதுடன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப். 19-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் விருப்பமனு விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு, விருப்ப மனுவை பெற்றுக் கொண்டவர்கள், மார்ச் 1 முதல் மார்ச் 7-ம் தேதிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பாக செயல்பட்டு வருகின்ற சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் சீட் வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. சிட்டிங் எம்பிக்களுக்கு சீட் கொடுத்தால் வெற்றி கிடைக்குமா, தொகுதி மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றனர், அவர்களுக்கு தொகுதிக்குள் நல்ல பெயா் உள்ளதா, தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு செவிமெடுக்கிறார்களா, தொகுதி மக்கள் எளிதில் அணுகமுடிகிறதா, மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் அனுசரித்து செல்கின்றார்களா, கோஷ்டி பூசல் உள்ளதா, விசிட்டர்கள் போல எம்பிக்களின் வீடு, அலுவலகங்களுக்கே சென்று பல்ஸ் பார்ப்பது உள்ளிட்ட கண்காணிப்புக்களையெல்லாம் சிட்டிங் எம்பிக்களுக்கே தெரியாமல் உளவுத்துறை மூலமாக ரிப்போர்ட் வாங்கி கையில் வைத்துள்ளது திமுக தலைமை. அதோடு சில தனியார் நிறுவனங்களையும் தொகுதிகளுக்குள் சர்வே எடுக்கசெய்ய சொல்லியிருக்கிறது.

பெரும்பாலான சிட்டிங் எம்பிக்கள் விருப்பமனுக்களை வாங்கியுள்ளனர். இதை பூர்த்தி செய்து தலைமையிடம் சமர்ப்பிக்க ஆயத்தமாகி வருகின்றனர். விரைவில் திமுக தலைமை வேட்பாளர் பட்டியலை தயார் செய்ய உள்ளது. அதில் தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டிலேயே சுமார் 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்கி அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி இம்முறையும் சீட் ரேஸில் உள்ளார். வைட்டமின் ப-வுக்கு பஞ்சமில்லாதவர். மாவட்டத்தில் இரு அமைச்சர்களும் முழு ஆதரவும், அமைச்சரின் வாரிசு ஆதரவும் பரிபூரணமாக உள்ளதால் எப்படியும் சீட் கிடைப்பது உறுதி என்கின்றனர். தொகுதி மக்கள் இவரை எளிதில் அணுகலாம், நேரடியாக எம்பிக்கே போன் செய்தால் அவரே பேசுவார் என்கின்றனர். கிராமப்பகுதிகளில் நிலவிய தொலைத்தொடர்பு பிரச்சனைகளை தீர்த்துவைத்தார், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்றாலும் கூட கைக்காசு போட்டு சில நல்ல விசயங்களை செய்து வருகிறார். எனவே, இவருக்கு சீட் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதிதான் என்கின்றனர்.