கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். கோபி கிருஷ்ணாவுக்கு, அன்பரசி என்ற மனைவியும், 10 மற்றும் 8 வயதில் ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். அத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது.கோபி கிருஷ்ணா துபாயில் வேலை செய்து வந்தாலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது, இந்தியாவுக்கு திரும்பி விடுவார்.
கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் என்பதால் கடந்த 2020-இல் தன்னுடைய வீட்டுக்கு ஹோம் ஆஃப் தோனி ஃபேன் என பெயரிட்டு, வெளிப்புறத்தை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மாடல் போலவும், தோனியின் பல படங்களை சுவற்றில் வரைந்து தோனியின் மீதுள்ள தன் அன்பை வெளிப்படுத்தினார். இது அந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கோபி கிருஷ்ணாவின் வீடு வைரலாகி பொதுத்தளத்தில் போசுபொருளானது.

தோனி, கோபி கிருஷ்ணாவின் வீட்டை இன்ஸ்டாகிராமில் பார்த்து.. இது எனக்கானது மட்டுமல்ல. சென்னை அணியின் மீதும், என் மீதும் உள்ள அன்பை வெளிப்படுத்தும் செயல். இது சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவுக்கு மொத்த குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். இது நீடித்து நிலைக்கக் கூடியது. சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுவிட்டு, உடனே மாற்றிவிடுவது போல கிடையாது. அதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகள்’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோபி கிருஷ்ணாவின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதோடு, திரை பிரபலங்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீட்டை நேரில் சென்று பார்த்தார்கள் வாழத்தினர். இதனால் கோபி கிருஷ்ணா தமிழகம் முழுக்க அறியப்பட்டார்.

இந்நிலையில் கோபி கிருஷ்ணா தனக்கு பெயரும் புகழும் தேடித்தந்த அதே வீட்டில் இன்று ஜன-18 அதிகாலையில் தூக்கில் தொங்கியவாறு சடமாக இருந்துள்ளார். அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அலறி துடித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ராமநத்தம் போலீஸார், கோபி கிருஷ்ணாவின் சடலத்தை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கோபி கிருஷ்ணாவின் உறவினர்கள் கூறுகையில், கோபி கிருஷ்ணாவுக்கும், இதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் கடன் பிரச்சனை இருந்தது. நேற்று கோபி கிருஷ்ணாவை சிலர் தாக்கியிருக்கிறார்கள். அந்த மன உளைச்சலில்தான் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது கந்துவட்டி பிரச்சனையாகக் கூட இருக்கலாம் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.