நாமக்கல் மக்களவை தொகுதி கறிக்கோழி, முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. பிரபல கல்வி நிலையங்கள் பலவும் இந்தத் தொகுதிக்குள் அமைந்திருக்கின்றன. லாரி பாடி பில்டிங் தொழில், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் வாகனங்கள், லாரி போக்குவரத்துத் தொழில் உள்ளிட்டவை பலரது வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன.

2009-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் உருவானதுதான் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி. வருவாய்த்துறை ரீதியாக, நாமக்கல் மாவட்டத்துக்குள் வரும் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் வரும் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியும் இந்த மக்களவைத் தொகுதிக்குள் அடங்கியிருக்கின்றன.

கொங்கு வெள்ளாளக் கவுண்டர், ஊராளிக் கவுண்டர், பட்டியல் சமூகத்தினர், உடையார், முதலியார், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எனப் பல சமுதாயங்களை, மதங்களைச் சேர்ந்த மக்களும் இங்கு கூடி வாழ்கிறார்கள். ஏற்கெனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், இரண்டு முறை திமுக-வும் ஒருமுறை அதிமுக-வும் நாமக்கல் தொகுதியைக் கைப்பற்றியிருக்கின்றன. 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ‘கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி’யைச் சேர்ந்த ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றிபெற்று எம்.பி-யாகத் தேர்வானவர்.

அதிமுக வேட்பாளர் எஸ்.தமிழ்மணி நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். எண்ணெய் நிறுவனம் நடத்துகிறார். அதிமுகவின் கடந்த முறை ஆட்சியில் உள்ளபோது செய்த திட்டங்களை எடுத்துக்கூறி, ஆளும் திமுக அரசை விமர்சித்தும் வாக்குச்சேகரித்து வருகிறார். இருப்பினும் அதிமுக கூடாரம் ஜோராக இல்லை என்கின்றனர்.

பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் பாஜக மாநில துணைத் தலைவர், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளராக உள்ளார். ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 1980, 1984 என இருமுறை அதிமுக எம்எல்ஏ-வாக இருந்துள்ளார். 1996-இல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2010-2016 வரையில் திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். கட்சிப் பணியிலும் தேர்தல் களங்களிலும் நல்ல அனுபவத்தைப் பெற்றவர். பலமான அணிகள் என்றால் அது எங்களது பாஜக அணியும், திமுக அணியும்தான். மூன்றாவது முறையும் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும். அதற்குத் தமிழகத்தில் இருந்து அதிக எம்.பி.க்கள் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு என பிரச்சாரக்களத்தில் பரப்புரை செய்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி வழக்கம்போல அவர்களின் கட்சிபாணியில்.. இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் ஊழலற்ற நிர்வாகம் கல்வி மருத்துவம் சுகாதாரம் போன்றவற்றில் உள்ள பாகுபாடுகளை அகற்றி அனைவருக்கும் சமமாக கிடைக்க பாடுபடுவேன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

திமுக கூட்டணியான கொ.ம.தே.க,. வேட்பாளர் மாதேஷ்வரன் அக்கட்சியின், நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். விவசாயம் மற்றும் லாரி தொழில் செய்து வருகிறார். கட்சி முன்னோடிகள் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். பொறுப்பு அமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்து வருகின்றார். திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் சுறுசுறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் சாதனைத் திட்டங்களை எடுத்துகூறியும், மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் எனவும் பரப்புரை செய்து வருகிறார். வேட்பாளருடன் இளைஞர்கள் பட்டாளம் அதிகம் உள்ளதால் தேர்தல் களம் ஜரூராக இருக்கின்றது.

ஆளுங்கட்சியின் மெகா கூட்டணி., கொங்குநாடு தேசிய மக்கள் கட்சித்தலைவர் ஈஸ்வரனின் பரப்புரை போன்றவற்றால் மீண்டும் கெ.தே.ம.கட்சி நாமக்கல் தொகுதியை தக்கவைக்கும் என்கிறார்கள்.